Sunday, July 01, 2007

இந்துத்தவத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்

அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை ஒன்றை காஞ்சி முனிவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைக்கப்போகிறார். இந்திய அரசியலில் ரதயாத்திரைகள் மிகவும் பழக்கமானவைதாம் என்றாலும் இந்த இரத யாத்திரை ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கும் முக்கியமானது. ஆரோக்கியமானது. ஏனெனில் இது விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரதயாத்திரை. தலித் சமுதாய மக்களின் வழிபாட்டுரிமை, சாதி அடிப்படையிலான மயானங்களை மாற்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவான மயானம் அமைப்பது, தலித்துகளின் நில உரிமை ஆகிய பன்னோக்கு அம்சங்களை கொண்ட இந்த இரதயாத்திரை அம்பேத்கர் மக்கள் கட்சியால் நடத்தப்படுகிறது. இந்த தகவலை அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவரும் முன்னாள் சென்னை மேயருமான டாக்டர் பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.1
காஞ்சி முனிவர் இதனை தொடக்கி வைப்பதென்பது மிகவும் சிறப்பானதாகும். அது மட்டுமல்ல பாரத தர்ம மரபின் ஒரு தொடர்ச்சியான நீட்சியே ஆகும். பாரத ஆன்மிக பாரம்பரியத்தில் பிறப்படிப்படையில் மக்களை ஒதுக்கும் பொதுவான சமுதாய போக்குக்கு கடுமையான எதிர்ப்பு ஆன்மிக அருளாளர்களால் காலம் காலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியகாம ஜபாலா எனும் முனிவர் தமது தந்தையை அறியமாட்டார் தாயை மட்டுமே அறிவார் என்ற போதிலும் அவர் ஆன்மஞானம் அருளப்பட்டு ஆன்மஞானியாக மிகப்பெரிய வேத முனிவராகத் திகழ்ந்தார்.
அரசனுக்கு வண்டி இழுப்பவரான ரைவகர் ஆன்ம ஞானம் அருளிய வரலாற்றினை சந்தோக்கிய உபநிடதம் ஆவணப்படுத்துகிறது. மகாபாரத உபகதை ஒன்று அந்தணன் ஒருவன் இறைச்சி கடைக்காரரான தர்மவியாதரிடம் ஆன்ம ஞானம் பெற்றதைக் கூறுகிறது. காசியில் கங்கை நதிக்கரையில் அருள் வாய்க்கப்பெற்றார் ஆதி சங்கர பகவத்பாதர். அந்த அத்வைத துறவிக்கு ஞான அருள் பாலித்த குரு சமுதாயம் ஒதுக்கி வைத்த சண்டாள ரூபம் தாங்கியவர். இராமனுஜர் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஞானத்தைக் கொண்டு சென்றதுடன் அவர்களை திருக்குலத்தார் என்றார். திருஞான சம்பந்தர் நீலகண்ட யாழ்ப்பாணரை வேள்வி நடக்கும் இடத்தில் படுக்க வைத்தார். இதே காலகட்டத்தில் உலகின் மற்ற பகுதிகளில் சாதியம் எவ்வாறு இருந்தது என்பதனை ஒப்பிட்டு நோக்கினால் நம் தேச மகான்களின் மாண்பு தெளிவாக புலப்படும்.உதாரணமாக கிறிஸ்தவ உலகின் சங்கரர் என தவறாக கருதப்படும் செயிண்ட் அகஸ்டைன் என்பவர் இன்றளவும் கிறிஸ்தவ இறையியல் மாணவர்களுக்கு உலகெங்கும் முக்கிய இறையியல் குரு ஆவார்.
இன்றைய கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகள் இவரது கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானவையே ஆகும். ஆனால் இவர் பாணர்களை மனிதர்களாகவே கருதவில்லை. பாவ பிறவிகளாகக் கருதினார். இவர்கள் கிறிஸ்தவ உலகில் தீண்டத்தகாதவர்களாகவும், கிறிஸ்தவ கம்யூனியன் வாங்க தகுதியற்றவர்களாகவும் இருந்ததோடு மட்டுமல்ல குடிமக்களாகவே கூட சேர்க்கப்படவில்லை.
16 ஆம் நூற்றாண்டு வரை நெசவாளர்கள், நாவிதர்கள், துப்பரவு தொழிலாளர்கள், பாணர்கள் போன்ற தொழிலாளர் குலங்களுக்கு எதிராக அவர்களது உடைகள் வரை கட்டுப்படுத்தப்பட்டன. அவர்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தலையாரி சமுதாயத்தினருக்கு எதிரான இழிவுபடுத்தும் நடைமுறைகள் 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரும் நடைமுறையில் இருந்தது.2 ஆனால் 17 ஆம் நூற்றாண்டு காலனிய விரிவாதிக்கத்துக்கு பின்னர் அபரிமிதமான முதல் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குள் பாய்ந்தது.

மேலும் ஐரோப்பிய இனம் அமெரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களில் வியாதியென பரவியது. அடிமை வியாபாரமும் கண்டங்களின் நிலப்பரப்பு ஐரோப்பிய இனங்களுக்கு கிடைத்ததும் அவற்றின் சாதிய முறைகளை தேவையற்றதாக்கின. அல்லது ஐரோப்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு விலையாக ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க அமெரிக்க பூர்விக மக்கள் இனங்கள் அடியோடு அழிக்கப்பட்டன அல்லது மிகக்கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் பாரத சமுதாயத்தில் மட்டுமே பொருளாதார இயக்கமாக அல்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அடிப்படையில் மானுட சமத்துவத்துக்கான குரல்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இன்றைய தீண்டாமை மற்றும் சாதியக்கொடுமைகளினை ஆதாயமாக்கிக் கொண்டு இந்து தருமத்துக்கு எதிராகவும் இந்து சமுதாயத்துக்கு எதிராகவும் இயங்கும் போலி-தலித் அமைப்புகள் இந்த வரலாற்றினைத்தான் மறைத்து விடுகின்றன. சாதிக்கொடுமை ஏதோ இந்து தருமத்தினால் மட்டுமே ஏற்பட்டது என்று பொய் கூறி வெறுப்பியல் பிரச்சாரம் செய்து பகைமை வளர்க்கின்றனர். பாணர்களையும் மேலும் சில மக்கள் சமுதாயங்களையும் இவ்விதம் ஒதுக்கும் போக்கு ஏறக்குறைய எல்லா மானுட சமுதாயங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த மக்களின் ஆன்ம எழுச்சியையும் விடுதலைவேட்கையையும் குறித்த பதிவுகளின் சுவடுகள் கூட பாரத சமுதாயமன்றி பிற சமுதாயங்களில் காணமுடிவதில்லை.உதாரணமாக எந்த சமய இலக்கியத்திலும் சரி அல்லது நாடக இலக்கியங்களிலும் சரி இந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் குரல் முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியங்களில் அழித்தொழிக்கப்பட்டது. இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் பாரத சமுதாயத்தில் இறைவனே இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக பக்தி இலக்கியங்களில் வெளிப்பட்டது பாரதத்தின் சிறப்பாகும். தொண்டரடிபொடியாழ்வார் திருமாலின் குரலாகவே மேல்சாதியினரைக் குறிப்பிட்டு கூறுகிறார்:

பழுதிலா ஒழுக்கலாற்றுப்
பல சதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேலும்
எம் அடியார்களாகில்
தொழுமின் நீர்: கொடுமின்:கொள்மின்:3
மேலும் ஆண்டவன் அடியவர்களில் சாதி குறித்து பேசினால் பேசிய மறுகணமே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சாதியம் எனும் பாவத்தை பொறுத்தவரையில் அடுத்த ஜென்மம் வரை இந்துக்களின் இறைவன் பொறுக்க மாட்டான். வைணவப்பெரியார் ஸ்ரீ மத் பி.ஸ்ரீ ஆச்சாரியர் அவர்கள் விளக்குகிறார்கள்:
"வேத வேதாந்தங்களை எல்லாம் தெரிந்து பரம பக்தனாயிருப்பவனுக்கும் அடியார்களைப் பழிப்பது அபாயத்தையே விளைக்கும் என்கிறார் (தொண்டரடிபொடியாழ்வார்.) பழிப்பு என்றால் தூஷிப்பது கூட அல்ல; சாதியைக் குறிப்பிடுவதே பழிப்பதாகும் என்பர். இதற்கு தண்டனை மறுமையில் எமலோகத்திலோ வேறு எங்கேயோ என்பதில்லையாம். தூஷித்த அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலேயே கிடைத்துவிடுகிறதாம்."4

மேலும் பாணர்கள் மேற்கத்திய நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்ட போது, பெரிய பெரிய கிறிஸ்தவ இறையியலாளர்கள் அத்தகைய கொடுமைகள் எல்லாம் நடக்கவே இல்லை - பாணர்கள் மனிதர்களே அல்ல என்கிற மாதிரி அவர்களைக் குறித்து அவர்களை அடக்கியதல்லாது வேறேது குரலும் கிறிஸ்தவத்தின் 1700 ஆண்டுகள் வரலாற்றில் பதியக்கூட இல்லாத மானுட சமத்துவமின்மை தாண்டவமாடிய உலகில் இந்து அருளாளர்கள் சமுதாயப் போக்கில் தாழ்த்தப்பட்ட பாணர்குல பெருமையை பதிந்துள்ளனர் என்பது நம் அனைவருக்கும் நாம் இன்றைய விளிம்பு நிலை சமுதாயத்திடம் எவ்வாறு ஒரு இந்து என்கிற முறையில் சேவை செய்திட வேண்டும் என்பதனை விளக்குகிறது. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் "திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்" எனக்கூறினால் திருமலை நம்பிகள் கூறுகிறார்:"பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே"

அய்யா வைகுண்டர் எனும் அவதார புருஷரின் உதாரணம் மற்றொரு நல்ல எடுத்துக்காட்டாகும். கிறிஸ்தவ மிசிநரிகளாலும் வெள்ளையர் கைப்பாவையான திருவிதாங்கூர் மேல்சாதி வர்க்கத்தாலும் அடக்குமுறைக்கு ஆளான சான்றோர் சமுதாயத்தை சுரண்டல், அடக்குமுறை, மதமாற்றம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி உரிமைகளை வென்று மானுடத்தின் வெற்றிக்கு காரணமான தெய்வீக புருஷர் அய்யா வைகுண்டர். அவரது அகிலத்திரட்டு எனும் அருள் நூலை நோக்கினால் சனாதனமாக பாரதம் முழுமைக்கு அருள் வழங்கும் சத்தியம் அய்யா வைகுண்டரின் சமுதாய எழுச்சிக்கு உள்ளொளியாக வெளிப்பட்டதை அறியலாம். கிறிஸ்தவம் போன்ற மதங்களில் இறைதூதன் அல்லது மீட்பர் எனக்கருதப்படுபவரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட மேல்சாதியிலேயே நிகழும். உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறப்பார் என முன்னறிவிக்கப்பட்டு அந்த குலத்தில்தான் ஏசு பிறந்ததாக கிறிஸ்தவர் கூறுகின்றனர். மோசடியான வம்சாவளி பட்டியலைக் கூட இதற்காக உருவாக்கி உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இறைவன் அவதரிக்க சாதி குலம் எதுவும் தடை இல்லை என்பது இந்து தத்துவம். இறைவன் ஆயனாகவும் அவதரிப்பார். சமுதாயத்தால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகவும் வருவார். இது இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறும் உண்மை ஆகும். எனவே அய்யா வைகுண்டர் அவதார புருஷர் என கேள்விபட்டவுடன், கிறிஸ்தவ ஆதிக்க கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் (கிறிஸ்தவ தாக்கத்தினால் இருக்கலாம்) அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா என கேட்க அதற்கு சாஸ்திரி ஒருவர் "எளிமையாம் குலங்கள் என்று எண்ணுற மனுவே அல்ல பளிரென ஆதிநாதன் பார்க்கவே மாட்டார் அய்யா"5 என்றார். மேலும் பூவண்டன் எனும் அமைச்சர் அரசனுக்கு இந்து ஞான மரபில் எந்த குலத்திலும் இறைவன் அவதரிப்பார் எனக் கூறும் போது அனைத்து விளிம்பு நிலை குலங்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திலும் இறைவன் பிறந்திருக்கிறார் எனக் கூறுகிறார்.

"பாணனாய் தோன்றி நிற்பார்; பறையனாய் தோன்றி நிற்பார்...குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார் மசவெனக்குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார் விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்"6
இவ்வாறு இந்து தத்துவம் வெறும் தத்துவமாக மட்டுமல்லாது நடைமுறை இயக்கமாகவும் பொருளாதார-அரசியல்-வரலாற்று சூழல்களால் தாழ்த்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளான பலவீனமான மக்களை காப்பாற்றும் விடுதலை இயக்கமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த பாரம்பரிய ஆன்மநேய கருத்தியலின் நீட்சியாகவே இந்துத்துவ அமைப்புகள் சாதிய எதிர்ப்பிலும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திலும் பெரும் பங்காற்றி வருகின்றன. உதாரணமாக வீர சாவர்க்கர் சாதியத்தை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தவர் ஆவார். அண்ணல் அம்பேத்கரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உண்மையாகவே மனம் வருந்தி உழைத்த பெருந்தகை என புகழ்ப்பட்ட பலிதானி சுவாமி சிரத்தானந்தர் இந்துமகாசபையின் முக்கிய தலைவர் ஆவார். இந்து சமுதாய ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி உழைத்த இந்த பெரும் தியாகி காங்கிரஸ் தலைமைப் பீடத்தால் உதாசீனப்படுத்தப் பட்டு பின்னர் இஸ்லாமியமதவெறியனால் சுடப்பட்டு மாண்டவர் ஆவார்.

வீர சாவர்க்கர் பல கட்டுரைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் குட்டகுட்ட குனியக் கூடாது என்றும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் எழுதினார். தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக ஆவதற்கு மேல்சாதியினர் ரத்னாகிரியில் எதிர்ப்பு தெரிவித்த போது, வீர சாவர்க்கர் அரசுக்கு எழுதினார், "தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக ஏற்க இயலாத அளவு மனிதத்தன்மை அற்றவர்களுக்கு கல்வி சாலையே தேவை இல்லை. தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக நியமிக்க முடியாது என்றால் பள்ளியையே இழுத்து மூடிவிடுவதுதான் உசிதம்." வீர சாவர்க்கரின் ஆதரவின் விளைவாக தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றுவது தடுக்கப்பட முடியாததாயிற்று. அண்ணல் அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்துக்கு ரத்னகிரிக்கு வெளியே செல்ல தடைசெய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர் ஆதரவு தெரிவித்தார். தனக்கு ரத்னகிரியை விட்டு வெளியே செல்ல தடை இல்லாத பட்சத்தில் தானே அம்பேத்கரின் இந்த சத்தியாகிரகத்தில் முதல் ஆளாக கைது ஆகியிருப்பேன் என அவர் எழுதிய கடிதமும் கோவில் தலித்துகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என அவர் எழுப்பிய கோரிக்கையும் அண்ணல் அம்பேத்கர் தன் 'ஜனதா' பத்திரிகையில் வெளியிட்டார்.7 என்ற போதிலும் மேல்சாதி மக்களின் சாதிய வெறி விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக வீர சாவர்க்கருக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு மேல்சாதியினரிடமிருந்து புகார்கள் போயின. அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் பினவருமாறு குறிப்பிடுகிறார்:

"இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது."
அண்ணல் அம்பேத்கரின் 'ஜனதா' சிறப்பு பதிப்பில் தலித்துகளுக்காக சாவர்க்கர் செய்யும் சேவைகளை குறிப்பிட்டு அவரை 'புத்தருக்கு ஒப்பான பெரியவர்' என கட்டுரை வெளியிடப்பட்டது8.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான பரம பூஜனீய குருஜி சாதீயத்தை அழித்திட எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளை புராண-இதிகாசங்களில் கூறப்படும் பகீரதனின் பிரயத்தனத்துடனேதான் ஒப்பிட முடியும். மானுட மூடத்தனமாகிய உயர் சாதி வெறியால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு சாதிய அரண்களால் அடைக்கப்பட்ட ஞான கங்கையை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளூக்கு கொண்டு செல்ல களமிறங்கிய நவீன பகீரதன் பரம் பூஜனீய குருஜி. சாதிதான் அனைத்து கேடுகளுக்கு காரணம் என்று ஒரு புறம் பேசிக்கொண்டு மறுபுறம் சாதிய ஓட்டுவங்கிகளை உருவாக்கும் முற்போக்குகள் வாழும் இந்த போலிகளின் உலகில் ஸ்ரீ குருஜி சமுதாய நல்லிணக்கம் குறித்து உண்மையான அக்கறையும் தெளிவான பார்வையும் கொண்டிருந்தார்:

"ஒரு மரம் தனது காய்ந்து போன இலைகளையும் பட்டுப்போன கிளைகளையும் உதிர்த்து புதிய இலைகளையும் கிளைகளையும் வெளிக்கொணர்வதைப் போல சமுதாயம் இன்றிருக்கும் வர்ண வியவஸ்தாவை உதிர்த்துவிட்டு அதன் இடத்தில் சமுதாய நலனுக்கு உகந்த புதிய சமுதாய அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ளட்டும். இது சமுதாயத்தின் இயற்கையான வளர்ச்சி முறையேயாகும்....பழைய வீட்டினை இடித்து தள்ளிவிட்டு புதிய வீட்டினை அமைப்பது போல தேவையற்ற சமுதாய அமைப்பினை இப்போதே இத்தருணமே முடிவடைய செய்ய வேண்டும்." 9
வரலாற்று புகழ் மிக்க உடுப்பு விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் இந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு துறவிகளையும் ஒரு மேடையில் ஒருங்கிணைத்து (இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் பட்ட வேதனைகளும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.)
வரலாற்று சிறப்பு மிக்க விஸ்வ இந்து பரிஷத்தின் இக்கூட்டம் தீண்டாமையும் சாதியமும் இந்து சாஸ்திரங்களுக்கு விரோதமானவை என அறிவித்தது
தீண்டாமை சாஸ்திர அடிப்படை அற்றது. எந்த இந்துவும் எந்த விதத்திலும் தாழ்த்தப்படலாகாது எனும் தீர்மானத்தை அவர் கொணர்ந்தார். இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் அதிகமான பரவலில் கல்வி சேவையையும் மருத்துவ சேவையையும் கொண்டு செல்லும் பாரத அமைப்புகள் குருஜியின் தொலைநோக்கு பார்வையால் உதித்தவை என்றால் அது மிகையல்ல.
ஒரு எடுத்துக்காட்டாக ஓராசிரியர் பள்ளி இயக்கத்தினை எடுத்துக்கொள்வோம். 20,142 ஆசிரியர்கள், 5,000 சுயவிருப்ப பணியாளர்கள், 20 களப்பணி நிறுவனங்கள்,8 ஆதரவு இயக்கங்கள் என 604260 நலிவுற்ற சமுதாயக் குழந்தைகளை சென்றடையும் இந்த இயக்கம் ISO 9001-2000 சர்வதேச தரச்சான்று பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.10 சமுதாய நல்லிணக்கம் என்பது பேச்சோடு நின்றுவிடாமல் செயலிலும் மிளிர்வதைக் காட்டும் பல எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று.

இப்பாரம்பரியத்தை சங்கம் வளர்க்கும் சான்றோர் முன்னெடுத்து செல்கின்றனர். குருஜிக்கு பின்னர் தலைமையேற்ற பரமபூஜனீய தேவரஸ்ஜி 1974 மே 7 இல் புனேயில் ஆற்றிய சொற்பொழிவு தெள்ளத்தெளிவாக சங்கம் எப்படிசமுதாய சமத்துவ நலம் காணப்போராடிய இந்து மரபின் தொடர்ச்சி என்பதனைக் காட்டியது. இந்த மகத்தான உரையில் அவர் குறிப்பிட்டார்:
"பழமையானது என்பதால் மட்டுமே நன்மை பயக்கக்கூடியது என்றோ நிரந்தரமானது என்றோ நாம் எதையுமே கருதமுடியாது. கடந்த காலங்களில் இந்த பழமையான நெறிகளுக்கு ஏற்ப வாழ்ந்ததால் புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கக் கூடாது என்று நாம் எண்ணக்கூடாது. எனது தகப்பனாரும் பாட்டனாரும் வெட்டிய கிணறு உப்புகரிக்கிறது என்றாலும் அவர்கள் இதையே குடித்து வாழ்ந்தார்கள் எனவே நாமும் அதையே குடிப்போம் என்கிற குருட்டுத்தனம் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது. இத்தகைய சிந்தனை தவறானது. ...களைய வேண்டியவற்றை களைந்து மேன்மையானவற்றை பகுத்தறிந்து காக்க வேண்டும்....தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் எதுவுமே பாவம் இல்லை. சமுதாய சமத்துவத்தைக் கொண்டு வர நாம் முயற்சிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் எவ்விதத்திலாவது சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்திட முயற்சிக்க வேண்டும்."
11

அண்மையில் எந்த அர்ச்சகர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான ஆலயப்பிரவேசத்தை மறுத்தாரோ அதே அர்ச்சகரின் பேரன் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திடம் தம் முன்னோர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.அவர் அப்படி மன்னிப்பு கேட்ட மேடை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி மேடை ஆகும்.12

தலித் எழுத்தாளர் ஸ்ரீ நாம்தேவதாசல் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் சுதர்சன்ஜியுடன்
அது போல அண்மையில் தலித் பாந்தர் அமைப்பு தலைவரும் பிரசித்தி பெற்ற தலித் எழுத்தாளருமான நாம் தேவ தாசல் சமுதாய நல்லிணக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸால் முழுமனதுடன் சாத்தியம் என்பதனை உணர்ந்து சங்க மேடையில் பேசினார். தமது பேச்சில் அவர் குறிப்பிட்டார்:
"இடதுசாரி நண்பர்கள் என்னை வசை பாடலாம். நான் அதற்காக வருந்தவில்லை. ஏனெனில் எனக்கு ஒரே குறிக்கோள்தான். அது தேசிய ஒருமைப்பாடும் சமுதாய நல்லிணக்கமும்....வெறும் பேச்சுக்களும் புத்தகங்களும் சமுதாய நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் கொண்டுவந்திட முடியாது. அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பான சமரஸா மஞ்ச் போன்றவற்றின் செயல்பாடுகள் மேலும் மேலும் விரிவடைவதன் மூலமே அது நடந்திடும்."13

அது போலவே நம் பொதுவான நினைப்புக்கு அப்பால் இன்றைய சமுதாய விளிம்பு நிலை மக்களில் பலரை இந்த விளிம்பு நிலைக்கு கொண்டு சென்றதில் காலனிய ஆதிக்க சக்திகளுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. இதுவும் இந்து விரோத கருத்தியல் கொண்டோ ரால் பெரிய அளவில் மறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குற்றப்பரம்பரை என முத்திரைக் குத்தப்பட்டு இன்றளவும் காவல்துறையினரால் கொடுமைப் படுத்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டில் இருப்போரால் சுரண்டப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வரும் சமுதாயத்தினர் ஆவர். இவர்களில் பல வனவாசி மற்றும் தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய மக்கள் அடங்குவர். உதாரணமாக சிங்கப்பூர் பல்கலைக்கழக சமூகவியலாளர் ஆண்ட்ரூ மேஜர் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சாபியர் மட்டும் 1,50,000 பேர் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டதையும் இத்தகைய தரவுகள் வெளியே அறியப்படாமல் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.14

1871 இல் பிரிட்டிஷ் அரசால் அமுலாக்கப்பட்ட இந்த கொடுமையான இனவாத சட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ இறையியல் மற்றும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் ஆகியவற்றின் தாக்கம் கொண்டது. தாய் தந்தையர் செய்த பாவம் குழந்தைகளுக்கு வரும் எனும் நம்பிக்கை உலகம் முழுததும் பொதுவாக இருந்தாலும் இந்திய மரபில் அது மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. எனவேதான் இரணியனுக்கு பிரகலாதன் பிறக்க முடியும் எனும் கருத்தாக்கம் இங்கு வேரூன்றியது. யாராவது ஒருவர் செய்த தவறுக்கு அவரது பரம்பரை பரம்பரையாக அது பாவசுமையாக வரும் எனும் நம்பிக்கை பாரதத்தில் வேரூன்றிடவில்லை. மாறாக, ஆதாம் செய்த பாவம் ஆதி பாவமாக மனிதகுலம் சுமக்கும் எனவும், கிறிஸ்துவினை கொன்ற இரத்தப்பழியை யூதர்கள் இன்னும் சுமப்பதாகவும் கொண்ட நம்பிக்கைகள் கிறிஸ்தவ மேற்கின் முக்கிய ஆதார நம்பிக்கைகளாக திகழ்ந்தன. இதன் விளைவாகவே இந்தியாவிலும் குற்ற பரம்பரையினர் என வனவாசி சமுதாயம் மற்றும் நாடோடி சமுதாயங்களை சார்ந்தவர்களை முத்திரை குத்தினர். பாரதம் முழுவதும் 160க்கும் அதிகமான சமூகத்தினர் குற்றப்பரம்பரையினர் ஆக்கப்பட்டனர். அவர்கள் காலனிய அரசின் காவல்துறையாலும் காலனிய அரசுக்குட்பட்ட சமுதாயத்தினாலும் கீழாகப் பார்க்கப்பட்டனர். பலவித சுரண்டலுக்கும் ஆளாயினர்.

அத்தகைய ஒரு சமுதாயமே பர்த்திகள். ரமேஷ் சதுபலே எனும் சங்க ஸ்வயம் சேவகர் தமது நிலத்தில் 18 ஏக்கர்களை இந்த சமுதாயத்தினருக்கான தங்கும் விடுதி கட்ட அளித்தார். பர்த்தி குழந்தைகளுக்கான தங்கும் கல்வி விடுதி அமைந்திட நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் நிதி உதவி அளித்தனர். சமுதாய சமரஸா மஞ்ச் தலைவர் திரு.ரமேஷ் பதங்கே எப்படி ஒரு 82 வயது ஸ்வயம் சேவக்கான திரு. தத்தோபந்த் பெத்தே என்பவர் 10,000 ரூபாய் சேகரித்துக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் பர்த்தி குழந்தைகளின் கல்விக்காக வீடு வீடாக அலைந்து பணம் சேகரித்து கொடுத்தனர்.15

இதுதான் இந்து சமுதாய சிந்தனை மற்றும் செயல்பாடு எனும் பிரவாகம். தமிழகத்தில் இப்பிரவாகத்தின் மைல்கல்லாகவே தலித் சமுதாய கோரிக்கைகளுக்கான ரதயாத்திரையை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி தொடங்கி வைப்பதையும் காண வேண்டும். ரைவகர் முதல் ரவிதாஸர் வரை ஆதி சங்கரர் முதல் அண்ணல் அம்பேத்கர் வரை வாழையடி வாழையென வந்த ஆன்மீக சக்தியுடன் சமுக நீதி காத்த புரவலர்களில் காஞ்சி முனிவரின் பெயரும் நிச்சயம் இடம் பெறும். காஞ்சி முனிவர் தொடங்கி வைக்கும் இந்த ரதயாத்திரையை ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் ஒவ்வொரு ஊரிலும் மேள தாளத்துடன் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்க வேண்டும். இந்த சமூக நீதிக்கான ரதயாத்திரையின் கோரிக்கைகள் நிறைவேற ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் முயற்சி செய்யவேண்டும்.



  • 1. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஜூன் 19 2007, 'Kanchi Seer to flag off Rath Yatra'
  • 2. Kathy Stuart, Defiled Trades and outcastes - honour and ritual pollution in early modern Germany pp.24-25 (Cambridge University Press, 1999)
  • 3.ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை -42 ஆம் பாடல்
  • 4.பி.ஸ்ரீ.ஆச்சாரியர், 'துயில் எழுப்பிய தொண்டர்' பக்.103-104 கலைமகள் காரியாலயம். 1957
  • 5.அகிலத்திரட்டு அம்மானை: 2831-32
  • 6.அகிலத்திரட்டு அம்மானை: 2852-53, 2855-57
  • 7.ஜனதா, 9 மார்ச் 1931
  • 8.ஜனதா, ஏப்ரல் 1933 சிறப்பு பதிப்பு பக்.2
  • 9.http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=159&page=17
  • 10.http://ekalindia.org/ekal_new/index.php
  • 11. 'சமுதாய சமத்துவம் இந்து ஒருங்கிணைப்பு' -ப.பூ.தேவரஸ் 1974 மே 7 ஆற்றிய உரை
  • 12.http://www.hindu.com/2005/08/15/stories/2005081501430900.htm
  • 13.http://timesofindia.indiatimes.com/articleshow/1945000.cms
  • 14.ஆண்ட்ரு மேஜர், "State and Criminal Tribes in Colonial Punjab: Surveillance, Control and Reclamation of the 'Dangerous Classes'"(Modern Asian Studies (1999), 33: 657-688 Cambridge University Press) http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=21611
  • 15. ரமேஷ் பதங்கே, 'ஆர்.எஸ்.எஸ்ஸும் மனுவாதமும்', 1998

Labels: , , , , , , , , ,

15 Comments:

Blogger எழில் said...

சிறப்பான பதிவு

வாழ்க வளமுடன்

9:57 AM, July 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி எழில்.

2:05 PM, July 01, 2007  
Blogger தகட்டூரான் said...

மிக முக்கிய பௌத்திக். நன்றி.

10:12 PM, July 01, 2007  
Blogger R. பெஞ்சமின் பொன்னையா said...

அரவிந்தன்,

நல்ல பதிவு. ஆனால் சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன். இந்துத்வத்தில் சாதீய கொடுமைகளை அழிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதை எடுத்துக்காட்ட முயன்ற அதே சமயத்தில் மற்ற ஆபிரகாமிய மதத்தவரை சாடவும் சளைக்கவில்லை நீங்கள். இயேசு கிறிஸ்துவுக்கும் சமாரிய பெண்ணுக்கும் இடையே நடந்த உரையாடலை எப்படி மறந்து போனீர்களோ தெரியவில்லை. அப்படியே தாவீதின் வம்சாவளியை கொஞ்சம் பாருங்கள். அவர் மன்னர் வம்சத்தவர் அல்ல. ஆடு மேய்த்தவர்.

3:11 AM, July 02, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள பெஞ்சமின்,
தங்கள் ஆழமான கருத்துகளுக்கு நன்றி. இது முக்கியமான விஷயம்தான் இல்லையா? டேவிட் ஆடு மேய்த்தவர். ஆனால் பின்னால் அவரது வம்சாவளி தேர்ந்தெடுக்கப்பட்டதாகிவிடுகிறது. மெசய்யா அதில் பிறப்பது என்பது முக்கியமாகிவிடுகிறது. அத்துடன் சமாரியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். சுருக்கமாக வம்சாவளிகள், பாரம்பரிய கோத்திரங்கள் முக்கியத்துவமடைகின்றன. 'நல்ல சமாரியன்' (அந்த பெயர் பிற்காலத்தில் வந்தது) கதையை கூறுகிற ஏசு எனும் தொன்ம நாயகனால் கூட தன் சீடர்களை சமாரியர்களை விலக்கிதான் உலகெங்கும் உள்ள காணாமல் போன இஸ்ரவேலரிடம் செல்ல சொல்ல வேண்டியிருக்கிறது (மத்தேயு 10:5). கிறிஸ்தவத்தை நான் தாக்குவதாக நினைக்காதீர்கள். கிறிஸ்தவத்தின் சில நேர்மறை பண்புகளை அதுவே கிறிஸ்தவம் என்றும் இந்து சமுதாயத்தின் பிரச்சனைகளை அதுவே இந்து தருமம் எனவும் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் பிரச்சார மாயையை உடைக்க இது அவசியமாகிறது. ஏனெனில் கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு பாயும் பணம் கூட காலனிய மூன்றாம் உலக நாடுகளை (இந்தியா உட்பட) உறிஞ்சி கொளுத்த அதே பணத்தின் recycling தானே.

3:55 AM, July 02, 2007  
Anonymous Anonymous said...

>>>> கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு பாயும் பணம் கூட காலனிய மூன்றாம் உலக நாடுகளை (இந்தியா உட்பட) உறிஞ்சி கொளுத்த அதே பணத்தின் recycling தானே <<<<<<

More information please.

8:39 PM, July 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள அனானி, திண்ணை.காமில் நான் எழுதிய 'வாக்களிக்கப்பட்ட பூமி சிண்ட்ரோம்' எனும் கட்டுரைத்தொடரை காணவும்.

9:18 PM, July 03, 2007  
Blogger ஜடாயு said...

1930-களில் சங்கத்தின் முதல் பயிற்சி வகுப்புகளிலேயே சாதியத்தை முற்றாகத் துறந்து அனைவருக்கும் பொதுவான உணவு, வசிப்பிடம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ். காந்திஜியும், டாக்டர் அம்பேத்கரும் அப்போழுதே இதைப் பாராட்டியிருக்கின்றனர்.

முழுமையாகவும், நிறைவாகவும் இந்துத்துவ இயக்கத்தின் சாதீயத்திற்கெதிரான கருத்தியலையும், செயல்பாடுகளையும் பற்றி எழுதி இருக்கிறீர்கள் அரவிந்தன்.

2:14 AM, July 07, 2007  
Anonymous Anonymous said...

யூரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இருந்த சாதி அமைப்பு பற்றியும், அவற்றை கிருத்துவ மதம் போற்றிப் பாதுகாத்தது குறித்தும், தொழிற்புரட்சியின் காரணமாய் சாதி அமைப்பு மறைந்தது குறித்தும் ஒரு கட்டுரை எழுத இயலுமா?

தயை செய்து.

7:08 AM, July 07, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி ஜடாயு.
நன்றி பனித்துளி. எழுதிக்கொண்டிருக்கிறேன்.

8:23 PM, July 07, 2007  
Blogger R. பெஞ்சமின் பொன்னையா said...

அன்புள்ள அரவிந்தன்,

இயேசு கிறிஸ்து சமாரியர்களை ஒதுக்கவில்லை. மத்தேயு 10 : 5 மற்றும் 6 ஐ மறுபடியும் ஒரு முறை வாசித்துப்பாருங்கள். அவர் சொல்வது "புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு போங்கள்".

இங்கு சமாரியர்களின் பட்டணத்துக்கு போக வேண்டாம் என இயேசு கிறிஸ்து கூறியதால் அவர் சமாரியர்களை வெறுக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ சொல்லவில்லை.

முதலில் சமாரியர்கள் யார் என்று பார்த்தீர்களானால், தன்னைத்தானே யூதன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் கர்வம் நிறைந்த யூதர்களுடைய வம்சமும், இன்ன பிற வம்சத்தாரின் கலப்பின வம்சமே இந்த சமாரிய வம்சமாகும். மேலும் இந்த சமாரியர்களுக்கும், யூதர்களுக்கும் எப்பொழுதும் ஒரு சுமூக உறவு இருந்ததற்கான ஆதாரங்களே இல்லை. காரணங்கள் பலவகை.
1. பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு திரும்பி வந்து தேவாலயம் கட்டத்தொடங்கிய யூதர்களுக்கு சமாரியர் தங்கள் ஆதரவு அளித்தபோது, யூதர்கள் அதனை ஏற்கவில்லை. இதனால் சமாரியர் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக நினைத்தனர். 2. நெகேமியா கோட்டையை பழுது பார்த்தபொழுது சமாரியர்கள் அதற்கு உதவி செய்யவில்லை.(நெகேமியா 6 :1 -4). 3. மேலும் யூதர்களால் வைராக்கியத்துடன் மதிக்கப்பட்டும் பின்பற்றப்பட்டும் வந்த "தோரா" எனும் மோசேயின் ஆகமங்களை சமாரியர் மதிக்கவில்லை. இப்படியாக அவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு பனிப்போர் இருந்த வண்ணமே இருந்தது. இந்த காலகட்டத்தில் சீஷர்கள் சமாரியாவில் சுவிஷேம் அறிவிக்க சென்றால்,நற்செய்தியின் முழு நோக்கமே நிறைவேறாதுபோய் விடக்கூடும்.
சுவிசேஷங்களை வாசிக்கும்பொழுது எல்லாவற்றிக்கும் ஒரு காலமுண்டு என்பதை அறிகிறோம். சமாரியர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் காலம் வந்தபொழுது தனது சத்துருக்களை சினேகிக்க கற்றுக் கொடுத்த இயேசு கிறிஸ்து தக்க நேரத்தில் சமாரியர்களிடம் சென்றார். (யோவான் 4 : 40, 41).
மேலும் தாங்கள் சொன்ன தாவீதின் அரசுப்பட்டத்திற்குப்பின் அவரது குடும்பம் அரச வம்சாவளியாக்கப்பட்டதற்கு சில ஆதாரங்கள் தாருங்களேன்.

மற்றபடி நீங்கள் சொன்ன கிறிஸ்தவ பிரச்சாரம், உறிஞ்சிக் குடித்த பணம் போன்றவற்றிற்க்கு சமகால அரசியல் மற்றும் சமுதாய நிர்பந்தங்கள் அல்லது தனி மனிதனின் ஆதாயம் தேடும் முயற்சிகள் தான் காரணம் என்று நம்புபவன் நான்

9:50 AM, July 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சமாரியர்களுக்கும் இதர யூதர்களுக்குமான பிரச்சனை கலப்பின பிரச்சனை என்றால் அதில் இன மேன்மையினை ஏசுவே ஏற்றுக்கொள்கிறார் அல்லவா? உதாரணமாக யோவான்-4:22.தாவீதின் வம்சத்தை - விதையை மேன்மைப்படுத்துவேன் என்றும் மெசையா தாவீதின் வம்சத்தில் வருவார் என்றும் 'கடவுள்' அளித்த வாக்கு குலப்பெருமை அல்லாது வேறென்ன? ஆக, சமாரியரல்லாத யூதரான ஏசு யூதர்களுக்கு தாங்கள் வணங்குவதைக் குறித்து தெரியும் என்று கூறி, சமாரியர்களுக்கு தெரியாது என்று கூறி பின்னர் உங்கள் இரண்டு பேருக்குமே இரட்சிப்பு என் மூலம்தானெனக் கூறிக்கொள்வதாக யோவானின் ஏசு கதை அமைக்கப்பட்டுள்ளது. மத்தேயுவிலோ சமாரியர் வீதியும் செல்லக்கூடாததாக மாறிவிடுகிறது.

6:39 PM, July 08, 2007  
Blogger எண்கோணம் [18222036756861491748] said...

பெஞ்சமின்,

தங்களுடைய மறுமொழிகளும், அரவிந்தனின் விளக்கங்களும் ஒரு அருமையான உரையாடலை கொண்டுவருகின்றன.

தாங்கள் சொல்லியுள்ள "இயேசு கிறிஸ்து தக்க நேரத்தில் சமாரியர்களிடம் சென்றார். (யோவான் 4 : 40, 41)." என்பதில் தக்க நேரம் என்று யோவான் எந்த காலத்தை கூறுகிறார்?

அங்கனம் பரமாத்மாவான ஏசு கிருத்து சாமாரியார்களிடம் சென்று என்ன போதனைகளை கூறினார், என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தினார்?

கிறிஸ்து என்கிற வார்த்தை இயேசுவிற்கு முன்பே இருந்த ஒன்றா? அல்லது இயேசு மட்டுமே கிறிஸ்து என்றூ அழைக்கப்படுகிறாரா? ஏன்?

1:14 AM, July 10, 2007  
Anonymous Anonymous said...

குழந்தைகளுக்கு போடும் அப்பத்தை நாய்களுக்கு போடலாமா என்று யூதரல்லாத மக்களை நாய்களுக்கு உவமானமாக சொன்ன வசனத்தை வைத்துத்தான் என்னிடம் கிறிஸ்துவ பிரச்சாரம் பண்ண வரும் வெள்ளைக்கார பாதம் தாங்கிகளை துரத்துவேன்.

இதனை கேளுங்கள் பதிலே வராது. தமிழர்கள் எல்லாம் நாய்களா?

9:49 AM, July 10, 2007  
Blogger R. பெஞ்சமின் பொன்னையா said...

எண்கோண நண்பரே,

தக்க நேரம் என்பது, சமாரியர்களுக்கும் யூதர்களுக்கும் இணக்கம் ஏற்பட்ட நாளிலிருந்து தொடங்குகிறது.

கிறிஸ்து என்பதற்கு "இரட்சிப்பவர்" என்று பொருள். லூக்க 2:11 ஐ வாசியுங்கள்.இயேசு கிறிஸ்து என்ன போதகம் பண்ணினார் என்று தெரிய யோவான் 4:42 ஐ வாசித்துப்பாருங்கள். நித்திய வாழ்வை குறித்து அவர்களுக்கு போதித்தார். சமாரியர்களிடம் அற்புதங்கள் நிகழ்த்தியதற்கான சான்றுகள் இல்லை.

அனானி அவர்களே,

வெள்ளைக்கார பாதம் தாங்கிகள் மதம் மாற்றவோ அல்லது மதப்பிரச்சாரம் செய்யவோ வந்தால் அவர்களை தயவு செய்து துரத்தி அடியுங்கள். மதப்பிரச்சாரம் செய்வதிலும் மதமாற்றம் என்பதிலும் எனக்கும் உடன்பாடு இல்லை.

8:52 PM, July 10, 2007  

Post a Comment

<< Home