Sunday, July 15, 2007

பேய் பயம் : திரை விமர்சனம்

எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005 இல் வெளியான ஆங்கிலப்படத்தின் தமிழாக்கம் 'பேய் பயம்'. உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இது கூறப்படுகிறது எமிலி ரோஸ் என்கிற கிராமப்புற கத்தோலிக்க பெண் நகரத்தில் பல்கலைக்கழகத்துக்கு சென்று படிக்க போகிறாள். ஒரு நாள் அதிகாலையில் விடுதியில் அவள் தனியாக இருக்கும் போது அமானுஷ்ய சக்திகளால் தான் தாக்கப்பட்டதாக உணர்கிறாள். தொடர்ந்து அவளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவளுக்கு வலிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமை மோசமாகவே அவள் கிராமவீட்டில் அவளுக்கு பேய் ஓட்ட ஏற்பாடு செய்கிறார்கள். கத்தோலிக்க பாதிரியார் ரிச்சர்ட் மூர் என்பவர் ரோம கத்தோலிக்க பேயோட்டும் சடங்குகளை செய்கிறார். ஆனால் எமிலி ரோஸ் இறந்துவிடுகிறாள். இந்நிலையில் பாதிரியார் மீது அவரது அலட்சியத்தால் எமிலியின் மரணத்துக்கு காரணமானதாக அரசு குற்றம் சாட்டுகிறது. பாதிரியாருக்காக இறைநம்பிக்கை இல்லாத எரின் ப்ரூனர் என்கிற பெண் வக்கீலும் பாதிரியாருக்கு எதிராக அரசு தரப்பில் கத்தோலிக்கரான ஈதன் தாமஸும் வாதாடுகிறார்கள். திகிலூட்டும் காட்சிகள் சாட்சிகளின் நினைவுகளூடே விரிகின்றன. எமிலிக்கு கிடைத்த அமானுஷ்ய அனுபவம், அவள் பட்ட வேதனைகள், அவள் பார்த்த அனைவரும் சாத்தானின் வடிவங்களாக அவள் கண்ட காட்சி என அவை காட்டப்படுகின்றன. இறுதியாக அவளுக்கு அன்னை மேரியின் தரிசனம் கிடைக்கிறது. அவள் உடல் துயரத்திலிருந்து தான் விடுவிக்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அவள் துன்பப்படுவதன் மூலம் இறைவனின் புகழ் பரவும் எனவும் மேரி அவளிடம் சொல்வதாக எமிலி காண்கிறாள். எமிலி துன்பத்தை தேர்ந்தெடுக்கிறாள். அவள் உள்ளங்கைகளில் காயம் ஏற்படுகிறது. அது ஸ்டிக்மாட்டா எனும் ஏசுவின் புனித காயத்தின் அமானுட வெளிப்பாடு என அவளும் பாதிரியாரும் கருதுகின்றனர். வழக்கு விசாரணையில் ஈதன் தாமஸ் அது அமானுஷ்யமாக ஏற்பட்டதல்ல, மனநிலை பாதிக்கப்பட்ட எமிலி இரும்பு வேலியை கையால் இறுக்கி ஏற்படுத்திக்கொண்டது என கூறுகிறார். இறுதியில் எமிலி ஒரு புண்ணிய ஆத்மாவாக கடவுளுக்காக கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு மரித்ததாக பாதிரியார் கூறுகிறார். பாதிரியார் அலட்சியம் காட்டவில்லை மாறாக அவள் மீது அன்பே காட்டினார் என்பது ப்ரூனரின் வாதம். ப்ரூனருக்கும் சில விபரீத அனுபவங்கள் ஏற்படுகின்றன. பாதிரியாருக்கு ஆதரவான ஒரு முக்கிய சாட்சி விபத்தில் இறந்துவிடுகிறார். இறுதியில் பாதிரியாருக்கு தண்டனை வழங்கப்பட்டு அது அவர் காவலில் வைக்கப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு வெகுவாக குறைக்கப்படுகிறது. ப்ரூனருக்கு அவள் பலகாலம் எதிர்பார்த்தபடி அவள் வேலை செய்யும் சட்ட மையத்தில் பங்குதாரராக ஏற்கப்படுகிறார். ஆனால் அவள் அதனை மறுத்துவிடுகிறாள். பாதிரியாரும் அவருக்காக வாதாடிய வக்கீலும் எமிலியின் கல்லறையில் சந்திக்கிறார்கள். இவை அனைத்தும் உண்மை எனவும் இன்று எமிலியின் கல்லறை ஒரு புனிதத்தலமாக கத்தோலிக்கர்களால் கருதப்படுகிறது எனக் கூறும் வார்த்தைகளுடன் படம் முடிவடைகிறது.

இருபக்கமும் சாராமல் இருபக்க நியாயங்களையும் வாதங்களையும் கூறி எடுக்கப்பட்டதாக கூறினாலும் கூட இத்திரைப்படம் எந்த பக்கம் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. இத்திரைகதைக்கு பின்னாலிருக்கும் உண்மையான எமிலி ரோஸ் யார்?

ஜுலை 1 1976 இல் ஒரு ஜெர்மானிய கிராமத்தில் இறந்த அனலீஸ் மிக்கேல்தான் திரையின் எமிலி ரோஸ். மிகுந்த கட்டுப்பாடும் தீவிர மத வைராக்கியமும் கொண்ட கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த இப்பெண் தனது 16 ஆவது வயது முதல் மனநிலை சமமின்மையால் மீண்டும் மீண்டும் அவதிப்பட்டு வந்தாள். 1973 இல் எர்ன்ஸ்ட் அல்ட் என்கிற பாதிரியார் இப்பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டது. கிபி 1614 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சடங்கு விதிமுறைகளின் (Rituale Romanum) அடிப்படையில் நடத்தப்பட்ட பேயோட்டல்கள் 1975 இலிருந்து ஆறு மாதத்தில் 67 முறை இந்த பெண்ணுக்கு நடத்தப்பட்டன. (படத்தில் ஒரேமுறைதான் பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டதாகக் காட்டப்படுகிறது.) முக்கியமாக முட்டுக்கள் தரையில் மோத மண்டியிட்டு விழுந்து பாவங்களுக்கு பிராயசித்தம் செய்யும் சடங்குகளை அவள் மீண்டும் மீண்டும் செய்திருந்தாள். அவள் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவள் முட்டெலும்புகளின் இணைப்புகள் சிதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவள் இறுதிக்கால கட்டத்தில் இந்த சடங்கினை செய்ய அவள் பெற்றோர்கள் உதவினார்கள். இந்த 67 முறை செய்யப்பட்ட சடங்குகளில் 42 பேயோட்டல்கள் டேப் ரெக்கார்டர்களில் பதிவு செய்யப்பட்டன. இந்த சடங்குகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் "ஏசுவின்/கடவுளின் பெயரால் கட்டளையிடுகிறேன். அசுத்த ஆவியே இந்த உடலை விட்டு விலகு" என்பது போன்ற வசனங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு தான் உண்மையிலேயே அசுத்த ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனவும் அது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கிறது.

1971 இல் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலமடைந்திருந்த வில்லியம் பிளேட்டியின் நாவல் 'எக்ஸார்ஸிஸ்ட்'. (பின்னர் தமிழில் பேய்-பெண்-பாதிரி என குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது.) 1973 இல் இந்த நாவல் திரைப்படமாக்கப்பட்டது. இந்நாவலும் திரைப்படமும் மேற்கத்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் இனமறியாத அச்சங்கள் ஏற்பட்டதாக உணர்ந்தனர். மனநல சிகிச்சை பெற்றனர். இத்திரைப்படத்தில் அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பெண் குழந்தையின் மாறிய குரல் பேச்சினை போலவே அனலீஸின் 'அசுத்த ஆவி' குரல் பேயோட்டும் சடங்கில் அமைந்துள்ளது தெரிந்தோ தெரியாமலோ அனலீஸ் இத்திரைப்படத்தினால் ஆழ்-மன தாக்கம் அடைந்திருக்கலாம் எனும் சாத்தியத்தையும் எழுப்பாமல் இல்லை. இங்கேகிடைக்கும் பேயோட்டும் சடங்கின் ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க விதத்தில் எக்ஸார்ஸிஸ்ட் பட ஒலியுடன் ஒத்து போவதை காணலாம். தன்னுடலில் புகுந்திருக்கும் ஆவிகளில் ஒன்றாக அனலீஸ் அடால்ப் ஹிட்லரை கூறினாள். அதிசயிக்கத்தக்க விதமாக வில்லியம் பிளேட்டியின் நாவலின் தொடக்கத்தில் ஹிட்லர் படுகொலைகள் நடத்திய அட்ச்விச்சையும் தீய ஆவிகளையும் முடிச்சு போட்டு - அதாவது மதச்சார்பற்ற சமூக வரலாற்று நிகழ்வுகளில் நாம் தீமை என காண்பவற்றையும் மதரீதியில் அமானுட தீய ஆவி என அறிந்ததையும் முடிச்சு போடும் விதமாக-காட்டப்பட்டுள்ளது.

அனலீஸை பொறுத்தவரை அவளது குழந்தை பருவம் முதலே பாவம் குறித்த பலத்த போதனைகளுடன் வளர்க்கப்பட்டாள். அவளது அன்னை திருமணத்தின் முன்னர் குழந்தை பெற்றுக்கொண்டதற்காக சர்ச்சால் அவரது திருமண நாளன்று கறுப்பு கவுன் அணியுமாறு வற்புறுத்தப்பட்டவர். அந்த பாவத்தின் பரிகாரமாக கடுமையான மதச்சூழலில் தன் மகள்களை அவர் வளர்த்தார். இவ்வாறு திருமண பந்தத்துக்கு அப்பால் பிறந்த பெண் -அனலீஸின் சகோதரி- சிறிய வயதில் இறந்தது தனது பாவத்துக்கான இறைத்தண்டனை என அவர் நம்பினார். இதெல்லாம் அனலீஸின் மனதில் பதிந்தது. அப்போது நடந்த வத்திகான்-II பாரம்பரிய கத்தோலிக்க நிலைபாடுகளிலிருந்து விலகி புரட்சிகரமான சில நிலைபாடுகளை எடுத்தது. இது பாரம்பரிய கத்தோலிக்க குடும்பங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனலீஸ் பாதை மாறிச்சென்ற கத்தோலிக்க பாதிரிகளுக்காக தான் பிரார்தித்து அவர்களுக்காக துன்பங்களை அனுபவிப்பதாக தரையில் உறங்க ஆரம்பித்தாள். அவ்வாறே பாதை மாறிச்செல்லும் இளைஞர்களுக்காக (அது ஹிப்பி இயக்கங்கள் இளைஞர்களை கவர்ந்திழுத்த காலகட்டமும் கூட) தாம் அவர்களின் பாவச்சுமையை தாம் தாங்குவதாகவும் கூறிவந்தாள். அனலீஸின் சிந்தனை மெதுவாக ஆனால் உறுதியாக பாவிகளுக்காக உயிர்தியாகம் செய்ய தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருத ஆரம்பித்தது. உணவினை மறுக்கலானாள். உலகின் பாவங்களை தாம் சுமக்கவே தீய ஆவிகள் தம் உடலில் புகுந்து தன்னை சித்திரவதை செய்வதாக அவள் நம்ப ஆரம்பித்தாள். பாதிரியார்கள் மட்டுமே அவளுக்கான ஒரே சிகிச்சையாளர்களாக இக்காலகட்டத்தில் அமைந்தது அவளது இந்த நம்பிக்கையை மேலும் உறுதிபட வைத்தது. அவளது செய்கைகளுக்கு அவளது அன்னையும் பாதிரியார்களூம் அமானுட விளக்கங்கள் அளிக்க ஆரம்பித்தனர். அனாலிஸ் இறந்த பிறகு அவளது சவபரிசோதனையின் அடிப்படையில் அலட்சியத்தாலும் மதபிடிப்பாலும் அவளது மரணத்துக்கு காரணமென நான்கு நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவளது அன்னை, தந்தை மற்றும் 'பேயோட்டிய' இருபாதிரிகள். 'அலட்சியத்தால் மரணம் சம்பவிக்க காரணமானவர்கள்' என தீர்ப்பு வழங்கப்பட்டது. கத்தோலிக்க சபை தனது பாதிரிகளுக்காக நியமித்த வக்கீல் நாஸி போர்குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய எரிக் சிம்க்ட் லெயிச்னர் என்பவர். ஜெர்மானிய சட்டப்படி ரோமானிய பேயோட்டும் சடங்கு செல்லும் என அவர் வாதாடினார். ஆறுமாத கடுங்காவல் தண்டனையும் மூன்று வருட நன்னடத்தை கண்காணிப்பும் பெற்றார்கள். இன்று அனலீஸின் கல்லறை தீவிர கத்தோலிக்க மதப்பற்றாளர்களுக்கு ஒரு புனித தலமாக விளங்குகிறது. 2005 இல் இந்த வரலாறு 'எமிலி ரோஸின் பேயோட்டச் சடங்கு' என திரைப்படமாக வெளிவந்தது. அனலீஸின் சாவுக்கு அமானுட காரணங்களை கற்பிக்கும் கத்தோலிக்க நிலைப்பாட்டுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்த அதே சமயம் மற்றொரு ரோமானிய நகர் ஒன்றில் ஒரு மடாலய கன்னியாஸ்திரி ஒருவர் அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு பேயோட்டும் சடங்கு முயற்சியில் மூன்று நாட்கள் உணவும் நீரும் கொடுக்கப்படாமல் கட்டிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார். தொடர்கதையாகும் அனலீஸ் என்கிற எமிலி ரோஸ்?
இயக்கம்: ஸ்காட் டெரிக்ஸன்
திரைக்கதை: ஸ்காட் டெரிக்ஸ, பால் ஹாரிஸ் ப்ராட்மேன்
இசை: க்ரிஸ்டோபர் யங்
எமிலி ரோஸாக: ஜெனீஃபர் கார்பெண்டர்


    மேலதிக விவரங்களுக்கு:
  • http://www.sonypictures.com/homevideo/theexorcismofemilyrose/index.html
  • http://en.wikipedia.org/wiki/The_Exorcism_of_Emily_Rose
  • http://en.wikipedia.org/wiki/Anneliese_Michel
  • http://www.chasingthefrog.com/reelfaces/emilyrose.php

Labels: , , ,

3 Comments:

Anonymous Anonymous said...

Appo English chadramuki than ithu...

7:39 AM, July 16, 2007  
Anonymous Anonymous said...

பதிவோடு சம்பந்தப்பட்டது போன்று தோன்றினாலும், சம்பந்தப்படாத கேள்வி இது.

பேய்கள் உண்டா இல்லையா?

பேய்கள் உண்டு என்றால் அவை மனிதர்களை பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

9:10 AM, July 25, 2007  
Anonymous Anonymous said...

nice post Mr.Aravindan,

I never seen such a detailed analysis. plz keep posting such things

1:51 PM, August 22, 2008  

Post a Comment

<< Home