Friday, August 19, 2005

நாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற அழகன்

நடராஜரின் மிஞ்ச இயலாத ரிதம், அழகு ஆற்றல், நளினம் ஆகியவற்றிற்கு அப்பால் நோக்கிய அனந்த குமாரசுவாமி "எச்சமயத்தாலும் எக்கலையாலும் வெளிப்படுத்தப்பட முடிந்த இறை செயல்பாட்டின் ஆகச்சிறந்த பிம்பம்" என எழுதினார். அண்மையில் ப்ரிட்ஜாஃப் கேப்ரா "படைப்பு அழிப்பு எனும் இசைவியக்கம் பருவகாலங்களிலும் உயிர்களின் பிறப்பிறப்பிலும் மட்டும் வெளிப்படுவதில்லை. ஆயின் அது
ஜடப்பொருளின் அடிப்படைத்தன்மையிலேயே விளங்குவதாக நவீன இயற்பியல் காட்டுகிறது" என்றும் " நவீன இயற்பியலாளருக்கு சிவதாண்டவம் பருப்பொருளில் அணுவினும் சிறிய துகள்களில் காணப்படும் தாண்டவம்" என்றும் கூறுகிறார். அது ப்ரிட்ஜாஃப் கேப்ரா முடிவு செய்ததது போலவே: "நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாரத கலைஞர்கள் நடனமாடும் சிவனின் அழகிய சிலைவரிசைகளை உருவாக்கினார்கள். நம் காலத்தில் இயற்பியலாளர்கள் மிகவும் நுண்ணிய தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி பிரபஞ்ச தாண்டவத்தின் கோலங்களைக் காட்டுகின்றனர். பிரபஞ்ச தாண்டவம் எனும் உருவகம் பழம் புராணத்தையும், சமயக்கலையையும், நவீன இயற்பியலையும் இணைக்கிறது."


ஜூன் 18, 2004, அன்று ஜெனீவாவின் CERN, எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு மீட்டர் உயரமுடைய நடராஜ சிலை நிறுவப்பட்டது. பாரத அரசால் இந்த ஆராய்ச்சி மையத்துடன் பாரதத்திற்கு உள்ள உறவினைக் காட்டும் விதத்தில் இது நிறுவப்பட்டது. அச்சிலை பீடத்தில் செதுக்கப்பட்ட வாசகங்களே நீங்கள் வாசித்தவை.

நவீன இயற்பியலின் பிரபஞ்ச தாண்டவ தரிசனத்திற்கும் நடராஜ தத்துவத்திற்குமான இணைத்தன்மைகள் ப்ரிட்ஜாஃப் கேப்ராவால் 1972 இல் அவர் எழுதிய "The Dance of Shiva: The Hindu View of Matter in the Light of Modern Physics," எனும் கட்டுரையில் வெளியிடப்பட்டது. (Main Currents in Modern Thought,1972). பின்னர் 1975 இல் அது 'இயற்பியலின் தாவோ' என நூலாக வந்தது. தமிழில் இந்நூல் பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி: http://www.fritjofcapra.net/shiva.html
புகைப்படம்: Giovanni Chierico (www.fritjofcapra.net)

6 Comments:

Blogger SHIVAS said...

"சிவதாண்டவம் பருப்பொருளில் அணுவினும் சிறிய துகள்களில் காணப்படும் தாண்டவம்"

இன்னும் எத்துனை வருடங்களுக்கு இப்படியான புரட்டுகளை விடப்போகின்றீர்கள் அன்பரே? அணுவின் அமைதியான வெளித்தோற்றத்திற்கு ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள சிலையும் நடராஜரர் சிலைக்கு அருகில் வைக்க முயற்சி செய்யுங்கள், உலகம் உருப்படும்.

3:01 PM, August 24, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

காஞ்சி பிலிம்ஸ்,

கீழே இருக்கும் வாசகத்தை படித்தீரா? "பிரபஞ்ச தாண்டவம் என்னும் உருவகம்" ...ஐயா ஏன் நடராஜரை நவீன அறிவியல் காட்டும் பிரபஞ்ச தரிசனத்திற்கான குறியீடாகக் கண்டுகொண்டனர்? அதில் இருக்கும் இணைப்புத்தன்மையையும் அழகியல் தன்மையையும் ஏற்படுத்திய ஆழமான வியப்பினால். "அணுக்களுக்குள் சிவதாண்டவம் நடக்கிறது" என்று ஹிந்துமதத்துக்கு சான்றாக ஹரூண் யாகிய இன்னபிற அடிப்படைவாதிகள் போல 'எம் நம்பிக்கைக்கு அறிவியல் சான்றுபகர்கிறது' என இது முன்வைக்கப்படவில்லை.

6:12 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

அப்படியே டா வின்சியின் Vitruvian man பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம் ;-)

9:55 PM, August 24, 2005  
Blogger ROSAVASANTH said...

காப்ராவின் கட்டுரை இணயத்தில் கிடைக்கிறதா? அல்லது உங்களிடம் மின்நகலாக இருக்கிறதா? இருந்தால் இடமுடியுமா? நன்றி!

10:46 PM, August 24, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஜும்பலக்கா,

தங்களை ஏமாற்றமடைய செய்வதற்கு மன்னிக்கவும். தாங்கள் வெட்டல்-ஒட்டல்/தட்டச்சு செய்துள்ள விசயம் என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை சார்ந்தது. அறிவியல் ஆதாரம் இல்லாதது. ஹிந்துக்களின் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் அறிவியல் ஆதாரம் உண்டு என்றோ அல்லது ஹிந்து தர்மத்திற்கு சான்று பகர்வது அறிவியலின் வேலை என்றோ கருதுபவன் அல்ல நான். நடராஜர் எனும் தெய்வத்தின் இருப்பை (in an Abrahamic sense) அறிவியல் உறுதி செய்துவிட்டதாக இப்பதிவு எங்காவது தெரிவித்துள்ளதா? அல்லது வெள்ளைக்காரன் ஊரில் எங்கள் தெய்வத்தின் சிலையை வைத்திருக்கிறார்கள் என்கிற ரீதியிலான பெருமைப்படலும் இதில் இல்லை. நடராஜர் எனும் தத்துவம் கலையையும், புராணத்தையும், அறிவியலின் நுண்-பிரபஞ்ச தரிசனத்தையும் நம்பிக்கைக்கு அப்பால் இணைக்கிறது என்பது குறித்தான பகிர்தல் மட்டுமே.

ரோசாவசந்த்,

காப்ராவின் 1970களின் கட்டுரை நானறிய இணையத்தில் இல்லை. இப்பதிவு தொடர்பான உரல் http://www.fritjofcapra.net/shiva.html
இது தங்களுக்கு போதுமானது என நினைக்கிறேன்.

3:14 PM, August 25, 2005  
Blogger ROSAVASANTH said...

பதிலுக்கு நன்றி. ஆனால்..

//இது தங்களுக்கு போதுமானது என நினைக்கிறேன்.//

இல்லை. இதை நானே போய் பார்தேன். என் ஆர்வம் முழு கட்டுரையையும், புத்தகத்தையும் படிப்பதுதான். பிரச்சனையில்லை, இந்தியா போகும் போது நானே முயற்சிக்க முடியும். நன்றி.

9:32 PM, August 25, 2005  

Post a Comment

<< Home