Wednesday, November 15, 2006

ஆர்.எஸ்.எஸ் சேவை அமைப்புகளுக்கு மத்திய அரசு பாராட்டு

'தன்னலமற்ற முறையில் திறமையாக வனவாசி மக்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன'



வனவாசிகளுக்கு சிறந்த பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை மத்திய அரசின் வனவாசி மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கை பாராட்டியுள்ளது.




  • அகிலபாரத வனவாசி கல்யாண் ஆசிரமும் அது சார்ந்த அமைப்புகளும்
  • சேவா பாரதி
  • வித்யா பாரதி மற்றும்
  • தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஆகியவை இந்த அமைப்புகள் ஆகும்.




இவை மிகச்சிறந்த முறையிலும் தன்னலமற்ற முறையிலும் வனவாசிகளின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளன என்பதனை மத்திய அரசின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.



சேவாபாரதி




சேவாபாரதி பாரதம் முழுவதும் 35000க்கும் அதிகமான சேவை பணிகளை செய்துவரும் இயக்கமாகும். இதன் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின் சிறுவர் சிறுமியருக்கு கல்வி அளித்தல், அன்பு இல்லங்களை நடத்துதல், பெண்களுக்கு சுயசார்பு அளிக்கும் தொழில்கல்வி அளித்தல் மற்றும் சுயநிதி குழுக்கள் மூலம் அவர்கள் செயல்பட உதவுதல். மருத்துவ சேவைகள்,பேரிடர் துயர் களைதல் ஆகிய அரும் பணிகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்தி வரும் அமைப்பு சேவா பாரதி ஆகும்.



வனவாசி கல்யாண் கேந்திரா


வனவாசி கல்யாண் கேந்திரா 1969 இல் உருவாக்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் முழுமையான வனவாசி முன்னேற்றத்திற்காக உழைக்கிறது. இந்த அமைப்பின் பல சமூக சேவகர்கள் பிரிவினைவாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்ற போதிலும் தளராது நலிவுற்ற மக்கள் சேவையில் முத்திரை பதித்து வருகிறது வனவாசி கல்யாண் கேந்திரா. தலித் பழங்குடி மக்களான ரியாங்குகளுக்காக நீதிமன்ற குரலை எழுப்புவதில் வெற்றி கண்டுள்ளது வனவாசி கல்யாண் அமைப்பின் வெற்றி மைல்கல்களில் ஒன்றாகும். ஒராசிரியர் பள்ளி மூலம் கல்வித்துறையில் இந்த அமைப்பு பெற்றுள்ள வெற்றி பல வளரும் நாடுகளுக்கு சிறந்த மாதிரியாக அமைந்துள்ளது.



தீன் தயாள் ஆராய்ச்சி மையம்

தீன் தயாள் ஆராய்ச்சி மையம் குறித்து மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளதாவது:

"தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஒரு தனித்தன்மை வாய்ந்த அமைப்பாகும். ஏனென்றால் அந்த அமைப்பு பாரதத்திற்கு மிகவும் ஏற்புடையதான கிராம முன்னேற்ற மாதிரியை வளர்த்தெடுத்து அதனை நிறைவேற்றி வருகிறது. தீன்தயாள் ஆராய்ச்சி மையம் மக்கள் சக்தியே அரசியல் அதிகாரத்தை விட மிகவும் உள்வலிமையும் ஸ்திரத்தன்மையும் சாசுவதத்தன்மையும் கொண்டது என அறிந்துள்ளது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட நலிவடைந்த மக்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் ஒருவர் அரசு நிர்வாகத்தின் இயக்க முறையை சரியாக அறிந்து கொள்ளலாம். சமுதாய முன்னேற்றமும் வளமும் ஏற்பட வேண்டுமானால் இளைய தலைமுறைக்கு செயல்திறமும் தற்சார்பும் கொண்ட உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தீன்தயாள் ஆராய்ச்சி மையம் 100 கிராமத் தொகுப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 5 கிராமங்கள் உள்ளன. ஏற்கனவே 16 தொகுப்புகளில் 50000 மக்கள் வாழும் 80 கிராமங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன."
(நன்றி : குடியரசு தலைவரின் இணையதளம்: 52 ஆவது தேசிய திரைப்பட விழா பரிசளிப்பின் போது டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பேசியதிலிருந்து: 21-10-2005, புது டெல்லி)