Friday, May 04, 2007

இமயமலையும் உலகம் வெப்பமடைதலும் : இஸ்ரோ ஆய்வுகள்

காற்று மண்டல சூடேற்றம் என்பது இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட உண்மையாகிவிட்டது. இதனால் பாரத தேசம் அடைகிற/அடையப்போகிற பிரச்சனைகள் இப்பொழுதே நம்மால்
கையாள முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதோ என தோன்றுகிறது. இந்நிலையில் பாரதத்தின் இமாலய மலைத்தொடரின் பெரும்பனிப்பாறை அமைப்புகள் - நம் வற்றாத
ஜீவநதிகளின் ஜீவாதாரமாக அமைபவை- அடைந்துள்ள மாற்றங்கள் நமக்கு இந்த பிரச்சனையின் ஆழத்தையும் பூதாகாரத்தையும் நமக்கு உணர்த்துகின்றன. இஸ்ரோ அமைப்பின் ஆழமான ஆய்வுகள் இது குறித்து சில முக்கிய தரவுகளையும் ஆராய்ச்சி முடிவுகளையும் ஒட்டுமொத்த பாரத சமுதாய மக்கள் முன் வைத்துள்ளது. நம் அரசியல்வாதிகள், ஊடகங்கள், வெகுஜனங்கள், இணையத்தில் உலாவும் வசதி படைத்த இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்கள், ஆகிய அனைவருமே இஸ்ரோவின் இந்த ஆராய்ச்சி முடிவுகளை அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் இயன்ற விதங்களில் -தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் நம் அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளில் தொடங்கி அரசியல் முடிவுகள் தீர்மானங்கள் வரை- நாம் இது குறித்து பிரக்ஞையை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். எனவே இது குறித்து நமது பாரத விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் என்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதனை காணலாம்.


உலகின் மிக முக்கிய நன்னீர் சேகரிப்பு தளமாக இமாலயம் விளங்குகிறது. துருவப்பிரதேசத்துக்கு வெளியே மிக முக்கியமான பெரும்பனிப்பாறைகளின் உறைவிடமாக இமாலயமே கருதப்படுகிறது. இமாலயத்திலிருந்து உருவாகும் பர்பதி நதியின் மூலமாக விளங்கும் பர்பதி நதியின் பெரும்பனிப்பாறையின் (glacier) மாற்றங்களை தனது ஆராய்ச்சி முடிவின் அறிவிப்பில் இஸ்ரோ வெளியிட்டிருந்தது. 1990, 1998, 2000 மற்றும் 2001 இன் செயற்கைகோள் படங்கள் மற்றும் கள ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் இந்த முக்கியமான பெரும்பனிப்பாறை ஆண்டுக்கு 52 மீட்டர்கள் பின்வாங்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. 11 ஆண்டுகளில் இந்த பெரும்பனிப்பாறை 578 மீட்டர்கள் பின்வாங்கி சென்றுள்ளது.இனிவரும் இருபது ஆண்டுகளில் இது 1461 மீட்டர்கள் பின்செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பின்செல்லல் என்பது சீரான வேகத்துடன் இயங்குவதல்ல. உதாரணமாக 1998 - 2000, இல் 22 மீட்டர் பின்சென்ற இந்த பெரும்பனிப்பாறை 2000-2001 இல் 97 மீட்டர் பின்சென்றது. மிகவேகமாக சிறியதாகும் இந்த பெரும்பனிப்பாறையை நம்பியே 800 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



ஜனவரி 2007 இல் இஸ்ரோ வெளியிட்டுள்ள இஸ்ரோ ஆய்வறிக்கை இம்மலைத்தொடரில் செனாப், பார்பதி மற்றும் பாஸ்பா ஆகிய இடங்களில் உள்ள 466 பெரும்பனிப்பாறைகளின்
படர்வு பரப்பளவு 1962 இல் இருந்து எவ்விதமாக குறைந்து வருகிறது என்பதனை ஆய்வு செய்துள்ளது.


இந்த ஆய்வு காட்டும் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவை. 1962 இல் 2077 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு இருந்த இந்த பனிப்பாறைகள் இன்று 1628 சதுர கிலோ மீட்டர்களாக
குறைந்துள்ளது. 21 சதவிகித பரப்பளவு பனிப்பாறைகளை நாம் இழந்துவிட்டோ ம். கொள்ளளவு எனப்பார்த்தால் 235. க்யூபிக் கிலோமீட்டர்கள் இருந்த பெரும்பனிப்பாறைகளின்
கொள்ளளவு 162.73 க்யூபிக் கிலோமீட்டர்களாக குறைந்துவிட்டது. அதாவது 30.8 சதவிகித கொள்ளவு வீழ்ச்சி.


மேலும் பெரும் பனிப்பாறைகள் சிதிலமடைந்து பல சிறு பனிப்பாறைகளாகியுள்ளன. சராசரியாக ஒரு பனிப்பாறையின் படர்வு (Mean glacial area extent) 1.4 இலிருந்து 0.32 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது. 1 சதுரகிலோ மீட்டருக்கும் குறைவான பரப்பளவு கொண்ட 127 பனிப்பாறையமைப்புகளும் பனிப்புலங்களும் 1962இல் இருந்ததைக் காட்டிலும் 38 விழுக்காடு பரப்பளவு இழந்துள்ளது. ஆக, வளங்குன்றா வகையில் நன்னீர் அளிக்கும் தன்மையினை பின்வரும் காரணிகள் இனிவரும் காலங்களில் கடுமையாக பாதிக்கக்கூடும்.
அக்காரணிகள்: பெரும்பனிப்பாறைகள் சிறுபனிப்பாறைகளாக சிதலமடைகின்றன சிறு பனிப்பாறைகளின் பரப்பளவு சாதாரணமாக பெரும்பனிப்பாறை குறைவதைக் காட்டிலும் வேகமாக குறைந்திடுகின்றது தட்பவெப்ப சூழல் மேல்கூறிய இரு காரணிகளையும் விளைவிக்கிறது.


இது குறித்து விரிவாக விரைவில் எழுதுவேன்.
இஸ்ரோ ஆய்வறிக்கைகளை கீழே காணும் முகவரிகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இது குறித்து திண்ணையில் திரு.ஜெயபாரதனின் கட்டுரைகள்

போனவார இந்தியாடுடேயிலும் இதுகுறித்து வந்துள்ளது என அறிகிறேன், போனவார இந்தியா டுடே தவற விட்டுவிட்டேன். அதில் வந்த விசயங்களை எவராவது பின்னூட்டத்தில்

Labels: , , ,

0 Comments:

Post a Comment

<< Home