Tuesday, March 27, 2007

ஏசு : வரலாற்றடிப்படையும் அப்பாலும் - 3

ஏசுவின் பிறப்பு முழுக்க முழுக்க பல்வேறு புராண கதம்பங்களால் ஆனது. அன்றைய ரோம சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரபல தொன்ம நாயகர்களின் பிறப்பு குறித்த அதீத நம்பிக்கைகள் ஏசுவுக்கு வழங்கப்பட்டன. மார்க்கு எழுதிய ஏசு காதையில் அவரது பிறப்பு விசேசமான செய்தியாக குறிப்பிடப்படவில்லை. யோவான் எழுதிய ஏசு கதையிலோ அவரது பிறப்பு தத்துவ அம்சங்களுடன் இணைத்து கூறப்பட்டாலும் கன்னியில் உதயமாகுதல், விண்மீன் முன்னறிவிப்பு, குழந்தைகள் கொலை போன்ற விசயங்கள் இல்லை. ஆக மத்தேயு, லூக்கா ஆகிய இருவர் எழுதிய ஏசு கதைகளிலேயே இந்த அம்சங்கள் விவரமாக எடுத்துரைக்கப்படுகின்றன. இயேசு காதையின் தொடக்ககால கட்டத்தில் அவரது பிறப்பு ஓரு முக்கிய விசயமாக இருக்கவில்லை. மாறாக அவரது இறப்பு-உயிர்த்தெழுதல் ஆகியவையே ஏசு காதையின் தொடக்கத்தில் முக்கிய அம்சமாக இருந்தன. மெஸபடோ மிய பலி கொடுக்கப்பட்டு மீண்டெழும் தெய்வக்காதைகளே தொடக்க கால ஏசு காதையின் முக்கிய அம்சம். எனில் ஏன் இந்த விஸ்தீகரண ஏசு பிறப்புக் கதைகள்? இதற்கு முக்கிய காரணம், யூதர்களை ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என நம்ப வைப்பதோ அல்லது யூதத்தின் வாக்களிக்கப்பட்ட உலக மெசையா ஏசு என பிற மக்களை நம்ப வைக்கவுமே இந்த விஸ்தீகரண சித்தரிப்பு உருவாகியிருக்க வேண்டும்.


புராணமா? வரலாறா? குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட கதையா?

ஏசு பிறந்த காலத்தின் வரலாற்று அடிப்படை:
இனி இந்த காதையின் சில முக்கிய கூறுகளின் நம்பகத்தன்மையை வரலாற்றின் அடிப்படையில் காணலாம். முன்னறிவிக்கப்பட்ட தெய்வீக நாயகனை வேட்டையாடும் தீய அரசன் எனும் தொன்ம அமைப்பு ஸ்டார்வார்ஸின் கதாநாயகர்களுக்கும் ஹாரி பாட்டருக்கும் வரை நீளக்கூடியது. மத்தேயு மற்றும் லூக்காவின் ஏசுகாதைகளே ஏசு பிறப்பினை விவரிக்கின்றன. இங்கே ஏசுவின் பிறப்பு என்ற உடனேயே நமக்கு முக்கியமாக நினைவுக்கு வருவது பெத்லகேமின் எல்லைக்குட்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் எரோது கொலை செய்வதுதான். (மத்தேயு 2:16) இது முழுக்க முழுக்க ஒரு புராண நிகழ்வு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிகழ்வுக்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. எரோதின் மரணம் பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கிமு 4 ஆம் ஆண்டு என கருதப்படுகிறது. அடுத்ததாக லூக்காவின் ஏசு காதை மற்றொரு வரலாற்று நிகழ்வினை ஏசுவின் பிறப்பு காலத்துக்கு அடையாளமாக அளிக்கிறது அது: 'சிரியா நாட்டில் சிரேனியு (census of Quirinius) என்பவன் தேசாதிபதியாக இருந்த போது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.' (லூக்கா 2:2) இந்த முதலாம் குடிமதிப்புக்கும் எரோதுவின் சாவுக்கும் பத்தாண்டு இடைவெளி உள்ளது. வரலாற்றறிஞர் ராபின் லேன் பாக்ஸ் (Robin Lane Fox)இது குறித்து விரிவாக பேசுகிறார். சிரேனியு சிரியாவின் அதிபனான காலம் குறித்து யூத வரலாற்றாசிரியர் ஜோஸப்பஸ் தெளிவாக கூறியுள்ளார். கிபி 6 ஆம் ஆண்டு எரோதின் மகன் அர்சிலஸ் பதவி இழந்த பின்னர் சிரேனியு சிரியா அதிபனாகிறான். இது நடப்பது எரோது அரசன் இறந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நிகழ்வாகும். சில கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த பிரச்சனையை சிரேனியு சிரியாவின் அதிபனாக இரண்டாம் முறை பதவியேற்றது குறித்த கல்வெட்டையும் கிமு 3 ஆம் ஆண்டு ரோம பேரரசன் ரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததையும் முடிச்சு போட்டு லூக்கா 2:2 ஐ நியாயப்படுத்துவதுண்டு. ஆனால் அந்த கல்வெட்டு சிரேனியுவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும் கிமு 3 ஆம் நூற்றாண்டு கணக்கெடுப்பு ரோமானிய குடிமக்கள் குறித்ததென்பதும் அது யூதர்களை உள்ளடக்கவில்லை என்பதும் இந்த தீர்வினை நியாயப்படுத்தவில்லை. எனில் இந்த காதை ஏற்பட்டது ஏன்?


எகிப்தும் ஏசு பிறப்பும்:




எலைன் பேகல்ஸ் இதற்கு ஒரு நல்ல விளக்கத்தைக் கூறுகிறார். ஏசுவின் பிறப்பு காதை ஒரு முக்கிய யூத புராண நிகழ்வினை தலைகீழாக்கும் புனைவு ஆகும். மிக மோசமான யூத வெறுப்பியல் கிறிஸ்தவத்தில் உருவாவதற்கு கட்டியம் கூறிய புனைவு இது என்று கூட கூறலாம். பேகல்ஸின் வார்த்தைகளில் இதனை காணலாம்: " மத்தேயுவின் ஏசு பிறப்பு புனைவொன்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை காட்டும் ஏகாந்த அழகு கதை அல்ல. மத்தேயுவின் கதைப்படி ஏசு நூலிழையில் மரணத்திலிருந்து தப்புகிறார். அதுவும் யூதக்குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல உத்தரவிட்ட ஒரு கொலைவெறி பிடித்த கொடுங்கோல் அரசனின் கட்டளையிலிருந்து. பல விவிலியிய ஆராய்ச்சியாளர்கள் இதற்கும் மோசஸ் கதைக்கும் உள்ள இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். மத்தேயு ஏசுவை ஒரு புதிய மோசஸாக காட்ட முனைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருமே மத்தேயு (ஏசுவை புதிய மோசஸாக காட்டும் அதேநேரத்தில்) எப்படி மோசஸ் காதையின் பல அடிப்படை அம்சங்களை தலைகீழாக்கியுள்ளார் என்பதனை சுட்டிக்காட்டியதில்லை. அந்த காதையே பாஸ்கா பண்டிகைக்காக நினைவோர்க்கப்படும் மோசஸ் யூதர்களை எகிப்திலிருந்து விடுவித்து கொண்டு சென்ற கதையாகும். அதிர்ச்சிகரமாக எகிப்திய சர்வாதிகாரியின் இடத்தில் மத்தேயு வைப்பது யூத அரசனான எரோதுவை ஆகும். இங்கு எரோதுவே -எகிப்திய பாரோ அல்ல-யூத குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல ஆணையிடுகிறான். மத்தேயுவின் வார்த்தைகளில் ஏசு பிறந்ததுமே எரோது அரசன் 'பிரதான ஆச்சாரியர் ஜனத்தின் வேதபராகர் எல்லோரையும்' (மத்தேயு 2:4) அழைத்து 'கிறிஸ்து' எங்கே பிறப்பார் என விசாரிக்கிறான். பின்னர் குழந்தையை தேடி கொல்ல உத்தரவிடுகிறான். இதனைத் தொடர்ந்தே ஏசுவின் குடும்பம் எகிப்திற்கு தப்பி செல்கிறது. ஆக எந்த எகிப்து தேசம் பாஸ்கா கொண்டாட்டத்தில் அடிமைத்தனத்தின் குறியீடு ஆகிறதோ அதே எகிப்து கிறிஸ்து பிறப்பில் கொடுமையிலிருந்து தப்பி சென்றடையும் தேசமாக மாறுகிறது. மற்றொரு விசயத்தையும் நாம் கவனித்திட வேண்டும் என மத்தேயு விரும்புகிறார். (யூதனான) எரோதுவும் அவனது சபையினரும் ஏசுவை கொல்ல முயலுகிற போது புறச்சாதி (Gentile) ஞானிகள் (மாஹி) -பின்னாள் கிறிஸ்தவ ஐதீகத்தில் கிழக்கு தேசத்தின் மூன்று ராஜாக்கள்- அவரை வழிபட வருகின்றனர்..." இந்த தொன்ம புனைவு நோக்கங்களை குறிப்பிடும் எலைன் பேகல்ஸ் இந்த இரு (ஏசு பிறப்பு குறித்து கூறும்) ஏசுகாதைகளும் ஒட்டுமொத்தமாக இறுதியில் உருவாக்கும் மனபிம்பத்தை வெளிப்படுத்துகிறார், " மத்தேயு உள்ளூட்டமாக யூத பெரும்பான்மையினரை சைத்தானுடன் இணைக்கிறார். லூக்கா அதனை வெளிப்படையாக செய்கிறார்." (எலைன் பேகல்ஸ், 'The Origin of Satan in Christian Tradition' யுதா பல்கலைக்கழக உரை, மே 14 1997) மற்றொரு அம்சம் என்னவென்றால் ஏசுகாதைகள் கூறுவது போலல்லாமல், எரோதுவுக்கும் பரிசேயருக்குமான உறவு நல்லதாக இருக்கவில்லை. இவர்களை கிறிஸ்தவ விவிலியம் சித்தரிக்கும் எதிர்மறை தன்மைக்கான காரணங்களை பின்னால் காணலாம். மேலும் எரோது தொடர்ந்து தன் மைந்தர்களை தனக்கு எதிராக சதி செய்வதாக கருதி வந்ததுடன் தனது சொந்த மகனையே கொலைத்தண்டனை அளித்து கொன்றான். எனவே இது குறித்து பரவிய கதைகளின் தாக்கமும் கிறிஸ்தவ விவிலியத்தில் உள்ளது.



கீழ்திசை மாகியும், வழிகாட்டிய விண்மீனும்: வரலாறா? புனைவா?

வழிகாட்டிய விண்மீன்?:
ஏசுவின் பிறப்பில் மற்றொரு முக்கிய அம்சம் அவரது பிறப்பினை அறிவித்த விண்மீன் ஆகும். மத்தேயு இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்:"எரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவரது நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்." (மத்தேயு 2:1-2) பின்னர் "ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுக்கொண்டு போகையில் இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல்வந்து நிற்கும்வரைக்கும் அவர்கள் முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்." (மத்தேயு 2:9-10) பல வானவியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இந்த விண்மீன் எதுவாக இருக்கும் என்று ஊகம் செய்துள்ளார்கள். ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர அவர்களால் இயலவில்லை. கிறிஸ்தவ விவிலியத்தின் மத்தேயு கதை கூறுவது போல ஒரு விண்மீன் (அது வால் நட்சத்திரமாக இருந்தாலும் கூட) அது நகர்ந்து ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்னால் நிற்பதென்பது நடவாத காரியம். என்றாலும் ஏசு பிறந்ததாக நம்பப்படும் காலகட்டத்தில் ஏதேனும் விண்மீன் தோன்றியிருக்கலாமா எனும் கேள்வி வரலாற்றாசிரியர்களாலும் வானவியலாளர்களாலும் கேட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்துள்ளது. மீண்டும் ஏசுவின் வாழ்க்கைக்கு எப்படி கிறிஸ்தவ விவிலியத்துக்கு வெளியே ஐயந்திரிபற்ற ஆதாரம் கிட்டவில்லையோ அது போலவே இந்த விண்மீனுக்கும் எவ்வித ஆதாரமும் கிட்டவில்லை. ஆனால் 2001 டிசம்பரில் ஒரு வானவியலாளரின் ஆராய்ச்சி வெளிவந்தது. மைக்கேல் மோல்னர் ரோம சோதிடத்தில் மேஷ ராசியில் (ரோம சோதிடத்தில் மேஷராசி யூதேயாவைக் குறிப்பது.) ஒரு நட்சத்திரம் தோன்றுகிற காலத்தினைக் குறித்து கூறுகிறார். இந்த நட்சத்திரம் உண்மையில் வியாழன் (jupiter) ஆகும். இது ரோம சோதிடத்தில் அரசனைக் குறிக்கும் நட்சத்திரமாகும். குறிப்பாக ஒரு பேரரசனின் பிறப்பு அல்லது பட்டமேற்பினை இது காட்டுவதாகும். ஆனால் இது ரோம சோதிடத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். அக்கால யூத மக்கள் இதனை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை மேலும் யூத குருமார்கள் ரோம சோதிடத்தை தேவனுக்கு ஆகாததென வெறுத்தொதுக்கினர். ஆனால் பிற்காலத்தில் (கிபி 3 ஆம் நூற்றாண்டுகளில்) சோதிட நம்பிக்கையுள்ள ரோமானியர்கள் மத்தியில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இந்த குறிப்பிட்ட சோதிட-கிரக நிலை (வானவியல் நிகழ்வல்ல) ஏசுவின் பிறப்புடன் இணைக்கப்பட்டது. அந்நாளில் பிரபல ரோம சோதிடக்காரனாகவும் கிறிஸ்தவத்தை தழுவியவராகவும் இருந்த ப்ர்மிக்கஸ் மாட்டர்னஸ் (Firmicus Maternus) என்பவர் கிபி 334 இல் ஒரு சோதிட நூலை எழுதினார். இந்நூலில் இந்த குறிப்பிட்ட (மேஷராசியில் வியாழன்) கிரகநிலையைக் குறிப்பிட்டு அது ஒரு இறப்பற்ற அரசனின் பிறப்பைக் குறித்ததாக கூறுகிறார். அக்காலத்தில் சோதிடம் ரோமானிய மக்களிடம் பெரும் ஆர்வமுடைய விசயமாக இருந்தது. அதே நேரத்தில் ஏசு குறித்த காதைகளும் பரவிக்கொண்டிருந்தன. இந்நிலையில் இந்த மட்டர்னஸின் இந்த கூற்று அவர் பெயரைக் குறிப்பிடாமல் கூறினாலும் அது ஏசுவைக் குறிப்பதென மக்கள் எடுத்துக்கொள்வார்கள் என்பதனை மாட்டர்னஸ் அறிவார். அதே நேரத்தில் அவர் ஏன் ஏசுவை பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. மோல்னர் கூறுகிறார்:" கிறிஸ்தவத்தை தழுவிய ஒரு பாகனாக (pagan) ப்ர்மிக்கஸ் இரு உலகுகளுக்கும் இடையே இழுக்கப்பட்டு துன்பப்பட்டார். எனவேதான் சோதிடத்தின் மூலம் ஒரு திரை மூடிய விதத்தில் ஏசு கதையை வலுப்படுத்தினார்." (மார்கஸ் சௌன், 'Early Christians hid the origins of the Bethlehem star', நியூ சயின்டிஸ்ட் டிசம்பர் 2001) சோதிடத்தையும் ஏசுவின் பிறப்பையும் இணைக்கும் பெத்லகேம் விண்மீனின் உண்மைத்தன்மை தொடக்ககால நிறுவன கிறிஸ்தவத்திற்கு தேவையற்ற இறையியல் பிரச்சனைகளை உருவாக்கிவிடலாம் என்பதால் பெத்லகேம் நட்சத்திரத்தின் இந்த உண்மைநிலை கிறிஸ்தவ நிறுவன சபையால் விரைவில் மழுங்கடிக்கப்பட்டு மறக்கப்பட்டது இத்தகைய சோதிட நிலைப்பாடு கிமு மத்தேயுவின் நட்சத்திரம் ஆக உண்மையில் பின்னாளில் கிறிஸ்தவத்தாலும் அந்நாளில் யூதத்தாலும் வெறுத்தொதுக்கப்பட்ட சோதிடத்தின் அடிப்படையில் உருவானது என்பது உண்மையிலேயே ஒரு முரண் நகைதான். எண்ணாகமத்தில் உள்ள ஒரு வாசகத்துடன் இந்த நட்சத்திரம் பின்னர் இணைக்கப்பட்டது. ("...ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்; ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.." -[எண்ணாகமம் 24:17] யூத அறிஞர்கள் இந்த வார்த்தைகளை முழுக்க முழுக்க வேறுவிதமாக அறிந்துகொள்கிறார்கள் என்பதுடன் எண்ணாகமம் யூத மறைநூலே அன்றி கிறிஸ்தவ நூல் அல்ல என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்.)


கன்னித்தாயும் யூத முன்னறிவிப்பும்:




அடுத்ததாக கிறிஸ்து பிறப்பு கதையின் முக்கிய அம்சம் ஏசுவின் கன்னி பிறப்பாகும். ஏசுவினை ஒரு வரலாற்றில் வாழ்ந்த மனிதராகவே எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போஸ்தலன் பவுல் ஏசுவின் சகோதரன் என கருதப்படும் ஜேம்ஸை அறிந்திருந்தவர் ஆவார். அவருக்கு இந்த கன்னி மூலமான ஏசு பிறப்பு குறித்து எவ்வித அறிவும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏசு தாவீதின் வம்சத்தில் மாமிசத்தின்படி பிறந்ததாக (பவுல் அப்போஸ்தலன் ரோமபுரியாருக்கு எழுதின நிருபம் 1:5) கூறுவதோடு மட்டுமில்லாமல் பரிசுத்த ஆவியின் மூலம் ஏசு மரணத்துக்கு பின் உயிர்த்தெழுந்ததைக் குறிப்பிடுகிறார். ஆக ஏசு கன்னி மூலம் பிறந்த கதைக்கான முக்கியத்துவம்தான் என்ன? அத்தகைய புனைவுக்கான காரணமாக எது இருந்திருக்க கூடும்? பொதுவாக கிறிஸ்தவ மதப்பரப்பு இலக்கியங்களில் கன்னி மூலம் ஒரு மகவைப் பெறுவது என்பதன் மூலம் ஏசுவின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட யூத முன்னறிவிப்பைப்பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது. அந்த முன்னறிவிப்பாக முன் வைக்கப்படுவது பின்வரும் யூத விவிலிய வார்த்தைகள் ஆகும்: "ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என பெயரிடுவாள்."(ஏசாயா 7:14) இந்த முன்னறிவிப்பே ஏசு கன்னிமரியாள் மூலம் பிறந்ததன் மூலம் நிறைவேறிற்று என கிறிஸ்தவ பிரச்சாரம் கூறுகிறது, முன்பே கூறியது போல காலத்தால் முற்பட்ட கிறிஸ்தவ ஏசு கதையான மார்க்கில் இத்தகைய புனைவுகள் ஏதும் இல்லை. எனவே இது பின்னாளில் யூதர்கள் ஏசுவின் 'வாக்களிக்கப்பட்ட'த்தன்மை குறித்த கிறிஸ்தவ பிரச்சாரத்தை எதிர்த்த போது உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யூதர்கள் இந்த கிறிஸ்தவ புனைவே ஒரு தவறான மொழிப்பெயர்ப்பு புரிதலின் விளைவாக எழுந்தது எனக் கூறுகிறார்கள். இன்று நேற்றல்ல கிறிஸ்தவர்கள் எப்போது கன்னி பிறப்பையும் ஏசாயாவின் வார்த்தைகளையும் இணைத்து பிரச்சாரம் செய்ய தொடங்கினார்களோ அப்போதிருந்தே இந்த பிரச்சனையும் தொடங்கிவிட்டது. எபிரேயத்தில் பருவப்பெண் என்பதற்கான பதம் 'அல்மா'('almah') என்பதாகும். இது கிரேக்க மொழி பெயர்ப்பில் பர்தெனோஸ்('parthenos') என மொழி பெயர்க்கப்பட்டது. இரண்டுமே மணம் புரியும் வயதடைந்த பருவப்பெண் எனும் பொருளுடையதென்றாலும் கன்னி என்பதற்கு மிக அருகில் வருவதாகும் (பின்னாளில் அப்பொருளையே அடைந்தும் விட்டது.) ஆனால் எபிரேயம் ஆண் தொடர்பறியாத கன்னி என்பதற்கு ஒரு தனி பதத்தினைக் கொண்டிருக்கிறது, அது 'பெத்துலா' (bethulah) என்பதாகும். கன்னி என்பதனை யூத விவிலியத்தை எழுதியவர் குறித்திருக்கும் பட்சத்தில் அது 'பெத்துலா' என்பது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏசுவின் கன்னி பிறப்பு யூத விவிலியத்தில் முன்னறிவிப்பு செய்ததாக கிறிஸ்தவர்கள் கூறியதற்கு இரண்டாம் நூற்றாண்டிலேயே யூதர்கள் 'அல்மா' என்பது இளம்பெண்ணே தவிர கன்னி என பொருள் கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளதை ஒரு கிறிஸ்தவ அறிஞர் தமது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். (ஜஸ்டினின் 'யூதருடன் உரையாடல்). ஏறத்தாழ இருபது நூற்றாண்டுகளுக்கு பிறகு மிகச்சிறந்த கத்தோலிக்க ஆசிரியராக அறியப்படும் ரேமண்ட் ப்ரவுன் தனது ஆராய்ச்சி நூலான 'Birth of the Messiah'வில் ஏசாயா 7:14 யூத சமயத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வான ஹெஸேக்கியாவுக்கு அகாசு பிறந்ததை குறித்ததாகவே இருந்தது என்பதனை தொடக்ககால கிறிஸ்தவர்கள் அறிந்திருந்ததைக் குறிப்பிடுகிறார். மேலும் ஏசாயா7:14 'இளம்பெண்' என மொழிபெயர்க்கப்பட்ட விவிலியங்கள் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் எரிக்கப்பட்டதையும், கத்தோலிக்க சபை மொழிபெயர்ப்பாளர்களை ஏசாயா7:14 'இளம்பெண்' என மொழிபெயர்க்காமல் கன்னி என மொழிபெயர்க்க கட்டாயப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார். இறுதியாக அவர் வரும் முடிவு என்னவென்றால் "ஏசாயா 7:14 கூறும் நிகழ்வு காலத்தில் பின்னால் நடக்கப்போகும் கன்னி கருவுறும் நிகழ்ச்சி குறித்ததல்ல. மாறாக வெகு அண்மைக்காலத்தில் பிறந்திடும் -பெரும்பாலும் தாவீத் வம்சத்து- இயற்கையாக கருவுற்று பெறப்படும் குழந்தையை குறித்ததுவே ஆகும்." (ரேமண்ட் ப்ரவுன் ''Birth of the Messiah",பக் 148)ஆக கன்னி மரியாள் மூலமான பிறப்பு என்பது பிற்காலத்தில் யூதர்களின் விவிலிய மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அற்புதச் செயலே ஆகும்.


ஏசுவின் பரம்பரை:


ஏசுவின் பரம்பரையும் லூக்காவிலும் (3:23-38) மத்தேயுவிலுமே (1:1-17) முக்கியமாகக் கூறப்படுகிறது. இதில் மத்தேயுவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏசுவின் பரம்பரையை மூன்றாக பிரிக்கலாம்: யூத புராண நாயகனான ஆபிரகாமிலிருந்து யூத அரசனான தாவீது மன்னன் - 14 தலைமுறைகள் பின்னர் தாவீதின் காலம் முதல் பாபிலோனிய சிறைவாசம் வரை 14 தலைமுறைகள் பின்னர் விடுதலையான காலம் தொட்டு ஏசுவின் நாள் வரை 14 தலைமுறையினர். இரண்டு தலைமுறை வரிசைகளும் யோசேப்புவில் (Jospeh) முடிகின்றன. ஆபிரகாமிலிருந்து ஏசுவுக்கு இடையிலான தலைமுறைகள் மத்தேயுவின் படி 38 லூக்காவின் படி 55. இதில் ஏசுவின் தாயின் கணவரான யோசேப்புவிலிருந்து 14 தலைமுறைகளுக்கு இந்த இரண்டு காதைகளிலும் கூறப்பட்டுள்ள தலைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
















லூக்காமத்தேயு
1. யோசேப்பு - ஏலியின் குமாரன் யோசேப்புவை யாக்கோபு பெற்றான்
2. ஏலி - மாத்தாத்தின் குமாரன் யாக்கோபுவை மாத்தான் பெற்றான்
3. மாத்தாத் - லேவியின் குமாரன் மாத்தானை எலெயசார் பெற்றான்
4. லேவி - மெல்கியின் குமாரன் எலெயசாரை எலியூத் பெற்றான்
5. மெல்கி - யன்னாவின் குமாரன்எலியூத்தை ஆகீம் பெற்றான்
6. யன்னா - யோசேப்பின் குமாரன்ஆகீமை சாதோக்கு பெற்றான்
7. யோசேப்பு - மத்தத்தியாவின் குமாரன்சாதோக்கை ஆசோர் பெற்றான்
8. மத்தத்தியா - சேமேயின் குமாரன் ஆசோரை எலியாக்கீம் பெற்றான்
9. சேமேய் - யோசேப்பின் குமாரன் எலியாக்கீமை அபியூத் பெற்றான்
10. யோசேப்பு - யூதாவின் குமாரன் அபியூத்தை சொரொபாபேல் பெற்றான்
11. யூதா - யோவன்னாவின் குமாரன் சொரொபாபேலை சலாத்தியேல் பெற்றான்
12. யோவன்னா - ரேசாவின் குமாரன் சலாத்தியேலை எகொனியா பெற்றான்
13. ரேசா - சொராபாபேலின் குமாரன் எகொனியாவை யோசியா பெற்றான்
14. சொராபாபேல் சலாத்தியேலின் குமாரன்ஆமோன் யோசியாவை பெற்றான்


இந்த முரண்பாடுகளுக்கு கிறிஸ்தவ இறையியலாளர்கள் பல சமாதானங்களை கூறிவந்துள்ளனர். உதாரணமாக லூக்கா மேரியின் பரம்பரையையும் மத்தேயு யோசேப்புவின் பரம்பரையினையும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு பரம்பரை கூறலும் யோசேப்புவினுடையதே. ஏசு காதை யூத புராணங்கள் மற்றும் யூத நம்பிக்கையின் மீட்பர் வருகையின் அடிப்படையில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் பரவிய போது எழுந்த எதிர்ப்பின் விளைவாக உருவாக்கப்பட்டதே காலத்தால் பிற்பட்ட மத்தேயு மற்றும் லூக்கா ஏசு காதைகளில் காணப்படும் இந்த விஸ்தீரண தலைமுறைகள் விவரணம். ஏறத்தாழ 1940 ஆண்டுகளுக்கு பின்னர் இதே ஏசு காதைகளின் அடிப்படையில் ஜெர்மானிய இறையியலாளர்கள் ஏசு யூத குலத்தை சேர்ந்தவரே அல்ல என திறமையாக வாதிட்டதையும் பிரச்சாரம் செய்ததையும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியை சூசன்னா கெர்ஷல் தமது 2005 உரையில் (ஆரிய ஏசு:கிறிஸ்தவர்கள் நாசிக்கள் மற்றும் பைபிள்). ஏசுவின் வரலாற்றுத்தன்மை வேண்டிய உருவெடுக்கும் திரவ நிலை கொண்டதென்பதற்கு மற்றொரு சான்று இது.


ஆக, ஏசுவின் பிறப்பின் வரலாற்று அடிப்படை என்பது எவ்விதத்திலும் ஆதாரமற்ற வலுவற்ற சீட்டுக்கோட்டையே ஆகும். அல்லது ஏசு கூறியதாக நம்பப்படும் வார்த்தைகளில் கூறுவதானால் மணல் மீது கட்டிய வீடு. அடுத்ததாக ஏசு செய்த அற்புதங்களின் புராணத்தன்மையைக் காணலாம். (தொடரும்)

22 Comments:

Blogger சிறில் அலெக்ஸ் said...

//ஏறத்தாழ 1940 ஆண்டுகளுக்கு பின்னர் இதே ஏசு காதைகளின் அடிப்படையில் ஜெர்மானிய இறையியலாளர்கள் ஏசு யூத குலத்தை சேர்ந்தவரே அல்ல என திறமையாக வாதிட்டதையும் பிரச்சாரம் செய்ததையும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியை சூசன்னா கெர்ஷல் தமது 2005 உரையில் (ஆரிய ஏசு:கிறிஸ்தவர்கள் நாசிக்கள் மற்றும் பைபிள்). ஏசுவின் வரலாற்றுத்தன்மை வேண்டிய உருவெடுக்கும் திரவ நிலை கொண்டதென்பதற்கு மற்றொரு சான்று இது.

//

இது அவரின் வரலாற்றுத் தன்மையை மறுப்பவர்களுக்கும் பொருந்துமே.

சுமார் 2000ம் ஆண்டுகளுக்குமுன் நடந்த/நடந்ததாகக் கருதப்படுகிறவற்றை இன்று எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இதைப் போன்று இயேசு இருந்தார் என்பதற்கு ஆதாரங்களை கிறீத்துவர்களும் பக்கம் பக்கமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

அடிப்படையில் நமக்கு நம்பிக்கையில்லாத விஷயங்கள் சில்லறையானதாகத்தான் தோன்றும்.

நான் இஸ்லாத்தையோ, இந்து மதத்தையோ பற்றி எழுதினாலும் இதைப்போல மறுப்பு/மாற்று கருத்துக்களைத்தான் எழுதுவேனோ என்னவோ..

Anyway interesting to read, especially to know that you are putting so much effort into this.

:)

6:45 PM, March 27, 2007  
Blogger ஜோ/Joe said...

பதிவுக்கு நன்றி!

6:52 PM, March 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//அடிப்படையில் நமக்கு நம்பிக்கையில்லாத விஷயங்கள் சில்லறையானதாகத்தான் தோன்றும்.//
சிறில் நிச்சயமாக நான் இதை சில்லறை விசயமாக பார்க்கவில்லை. ஏசு காதையில் தொன்மக்கூறுகள் இருப்பதையும் கிறிஸ்தவ சபைகளால் மிக முக்கிய அம்சமாக முன்வைக்கப்படும் ஏசுவின் வரலாற்றுத்தன்மை அவர்களின் பிற சமய ஒப்பீடு பிரச்சாரங்களில் இருப்பது போல அப்படி ஒன்றும் வேற்று மத புராண நாயகர்களைக் காட்டிலும் அப்படி ஒன்றும் அதிக ஆதாரபூர்வமாக இல்லை என்பதையுமே சுட்டிக்காட்ட விழைகிறேன். கிறிஸ்தவ சபைகள் தமது மதத்தை பரப்பவேண்டுமென்றே பிற மதங்களை ஆராய நிறுவன அமைப்புகள் மூலம் எத்தனையோ கோடி டாலர்களை செலவழித்து செய்து எத்தனையோ குழப்பங்களை உலகமெங்கும் விதைத்திருக்கிறார்கள். ஆரிய் திராவிட இனவாதம், யூத வெறுப்பியல், ருவண்டா இனவாத மானுடவியல் என எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும். டார்ச் லைட்டை சற்றே தன் பக்கம் திருப்பினால் எப்படி இருக்கும் என்பதனைக் காட்டியிருக்கிறேன் அவ்வளவுதான். கன்னி பிறப்பு, பெத்லகேமின் விண்மீன் போன்றவற்றை ஒரு அகவயப்பார்வையில் நோக்கினால் அவை அழகிய குறியீடுகளாக கூட உருவாகக் கூடும். இந்து சூழலில் -ஒரு மகாத்மா காந்தியோ அல்லது சுவாமி ரங்கனாதானந்தரோ- ஏசு தொன்மத்தை அப்படித்தான் பயன்படுத்தியிருப்பார்கள். அத்தகையதொரு வேதாந்த உயிர்த்தெழுதலுக்கு வரலாற்றின் ஏசு சிலுவையில் மரிப்பது அவசியம் என நினைக்கிறேன்.

6:55 PM, March 27, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

அரவிந்த்,
கிறீத்துவம் இயேசுவின் வரலாற்றை ஆராயவில்லை என்பது சரியானதாயல்ல. ஆனால் அது எப்போதும் தன் நம்பிக்கையை முன்வைத்து ஆராய்கிறது. இரத்தக்கண்ணீர் வடிக்கும் புதுமைகளானாலும், வரலாறானாலும் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள திருச்சபை தவறியதில்லை. (சில நேரங்களில் சுய இலாபத்துக்காகவும் இவை செய்யப்பட்டுள்ளன).

குறியீடுகளின் அழகியல், நீங்கள் சொன்னாலும் சொல்லாவிடினும் நிச்சயம் பெறப்படுகிறது. இயேசுவின் கடவுள்தன்மை முழுவதும் குறியீட்டு அழகியல்களாலேயே உணரப்படுகிறது. ஆனால் அவரின் மனிதத்தன்மை நீங்கள் மறுக்கும் வரலாற்றிலிருந்து பெறப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இரண்டுமே முக்கியம். முன்னதை மறுத்து பின்னதை ஏற்ப்பவர்களும் உண்டு. அதாவது இயேசு என்னும் மனிதன் உண்டு ஆனால் அவர் கடவுள் இல்லை எனச் சொல்பவர்கள்.

கிறீத்து வாழ்க்கையின் தெய்வீக குறியீட்டு அழகியலை ஏற்றுக்கொள்பவராய் ஒருவர் இருப்பின் இயேசு தெய்வமாக்கப்பட்டார் என்பதில் மகிழ்ச்சிகொள்பவராய்த்தானிருக்கவேண்டும்.

இயேசு எனும் தெய்வீகத் தன்மைகொண்ட ஒரு மனிதரின் வாழ்க்கையை எழுதும்போது அப்போதைய கதைகளின் கூறுகளைச் சேர்த்து மேம்படுத்தி எழுதியிருக்க வாய்ப்புள்ளது என்பதை மறுக்க இயலாது. இதை இந்து புராணங்களில் எளிதில் காண இயல்கிறது. (குறையாய் சொல்லவில்லை).

எனினும் பைபிளில் சொல்லியிருப்பதெல்லாம் உண்மை என நம்புபவர்களை தடுக்க பைபிளில் சொல்லியிருப்பதெல்லாம் பொய் எனச் சொல்லும் உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை. இரண்டு கட்சிகளுமே தங்களை நிரூபித்து மற்றதை வலுவாக மறுக்கின்றன.

ஆக தனி ஒருவனாய் நமக்கு என்ன மிஞ்சுகிறது. யாரோ எடுத்துரைக்கும் வார்த்தைகள். நானே உணர்ந்து அறிய முடியாத so called 'உண்மைகள்' இரண்டு பக்கமும் கூறப்படும் வலுவான ஆதாரங்கள்.

I am finally left with my own faith, belife. I may choose to belive either side.

ஜோசபெசை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள் அவர் இயேசுவின் வரலாற்றை மறுத்தவர் இல்லையே?

7:27 PM, March 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

There is a general scholarly consent that Josephus never mentioned Jesus and the only mention that is attributed to Jospehus regarding Jesus is an interpolation by Christians. i shall deal with it in detail when i take up the issue of the record of Jesus or his absence outside the Gospels

10:20 PM, March 27, 2007  
Anonymous Anonymous said...

எப்படியோ எங்க பொளப்பு ஓடுது

10:50 PM, March 27, 2007  
Anonymous Anonymous said...

Aravind,

Good analyis, But do you ever thought if Jesus is a story, How comes the whole world follows it and it is exisiting for 2000 years.?.. wat do you tell about people who have seen Jesus in this era,..? Wat is your opinion about people who have experienced Jesus like me..I have experienced Jesus. He has changed my life for once I was doing all kind of nonsense in this world..Now He is speaking to me daily and guiding me through his words and blessed my life. I am no more sinner...

So how come Jesus be false then...?

11:45 PM, March 27, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

கிறீத்துவம் இயேசுவின் வரலாற்றை ஆராயவில்லை என்பது சரியானதாயல்ல. ஆனால் அது எப்போதும் தன் நம்பிக்கையை முன்வைத்து ஆராய்கிறது.

ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைப் பற்றிய "கணிப்புக்களை" வெளியிடுவது மட்டுமே அறிவியற் பூர்வமான ஆராய்ச்சி ஆகும்.

அறிவியற் பூர்வமான வரலாறு திறந்த மனத்துடன் கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் தனது கணிப்புக்களைக் கூர்மையாக்கிக்கொண்டே போய் உண்மையை உணரவைக்கின்றது. இந்த ஆதாரங்களும் அறிவியல் அடிப்படையில் நம்பக்கூடியவை என்று நிரூபணம் ஆகவேண்டியவைதான்.

முன்முடிவுகளை வைத்துக்கொண்டு அந்த முடிவிற்குத் தேவையான ஆதாரங்களைத் தேடுவதற்கு ஆராய்ச்சி என்ற பெயர் கொடுக்க இயலாது. வரலாற்றுப்போக்கில் நடைபெறும் இந்த அரசியற் செயல்களுக்கு ஃபாஸிஸம் என்று பெயர் கொடுத்துள்ளார்கள்.

கிருத்துவ மதத்திற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு அதன் தியாலஜியை வரலாற்றின் அடிப்படையில் அமைத்துள்ளது என்பதுதான். ஹிந்து மதங்கள் எந்த வரலாற்றையும் சார்ந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் வரலாறு என்பதே தேவையில்லாதது என்று எத்தனையோ யுகக்கணக்கில் தனது புராணக் கதைகளை அது வரலாறாக வைத்துள்ளது. இதுவே ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க முடியும். கற்றுக்கொள்ள வேண்டிய உண்மை அரிசியை, வரலாற்று உமிக்கு இணையாக ஹிந்து மதங்கள் வைக்கவில்லை. இது மிகப் பெரிய வேறுபாடு. காலம் என்பதே ஒரு மனிதக் கற்பனையாயிருக்க இதில் காலத்தினால் பிறந்த வண்ணப்பிரிகைகளை வெறுமே கறுப்பு வெளுப்பாகப் பார்க்க நினையாத தத்துவத்தின் வெளிப்பாடு இது.

இரத்தக்கண்ணீர் வடிக்கும் புதுமைகளானாலும், வரலாறானாலும் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள திருச்சபை தவறியதில்லை.

மேரி மற்றும் இன்ன பிற புனிதர்களின் சிலைகள் திடீரென்று ரத்தக்கண்ணீர் வடிக்கும்போது, வத்திக்கானின் ப்ரதிநிதி இந்நிகழ்வின் நம்பகத்தன்மையை சிலசமயங்களில் மறுத்துள்ளதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இதுபோன்ற சில்லுண்டி அற்புதங்களை மறுப்பதற்கும், ஏசுவின் வரலாற்றை நம்பிக்கையின் அடிப்படையில் ஆய்வதற்கும் மிகப்பெரிய வித்யாஸம் இருக்கிறது. ஸெலெக்டிவ் அம்னீஷியா மாதிரி இவை ஸெலெக்டிவ் சுயபரிஸோதனைகள்.

இயேசுவின் கடவுள்தன்மை முழுவதும் குறியீட்டு அழகியல்களாலேயே உணரப்படுகிறது.

குறியீட்டு அழகியல்களைப் பயன்படுத்தி, ஏசுவின் கடவுள்தன்மையை உறுதி செய்ய செய்யப்படும் முயற்சிகள் பற்றித்தான் அரவிந்தன் சொல்லுகிறார். நம்பிக்கையாளர்களோ குறியீட்டு அழகியல்களின் மூலமாய் பக்தியை ஏசுவிடம் செலுத்துகிறார்கள். இது ஆன்மீக அளவில் இருக்குமாயின் க்ருஷ்ணரையும், ராமரையும் போன்று ஏசுவை வணங்குவதற்கு எந்த கருத்து வேறுபாடும் இராது.

ஆனால், அதே குறியீட்டு அழகியல்கள் வேறு ஏதேனும் கடவுளுக்குப் பயன்படுத்தப்படும்போது அவற்றை எதிர்ப்பது மத அரசியலைச் சார்ந்தது. இங்கே அரவிந்தன் இந்த மத அரசியலைப்பற்றி மட்டும்தான் பேசுகிறார் என்று தோன்றுகிறது. நீங்கள் ஆன்மீகம் பற்றி பேசுகிறீர்கள்.

எனினும் பைபிளில் சொல்லியிருப்பதெல்லாம் உண்மை என நம்புபவர்களை தடுக்க பைபிளில் சொல்லியிருப்பதெல்லாம் பொய் எனச் சொல்லும் உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை.

இந்த தீர்ப்பை கூறும் பண்ணையார் யார்?

I am finally left with my own faith, belife. I may choose to belive either side.

What forces to choose a particular side, and to stick to it?


இரண்டு கட்சிகளுமே தங்களை நிரூபித்து மற்றதை வலுவாக மறுக்கின்றன.

இந்த நிறுவுகின்ற, மறுக்கின்ற இரண்டு கட்சிகளின் நோக்கத்திற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளனவே. இதை மறுக்கின்ற வாதம் எழ பெருங்காரணம் இந்த வரலாறு மறுக்கப்படுமாயின் கிருத்துவ இறையியலே மறுக்கப்பட்டுவிடும் என்பது. பின் அதற்கும் மற்ற பாகன் மதங்களுக்கும் முக்கியமான பல விஷயங்களில் வேறுபாடு இல்லாதுபோகும். இங்கனம் வேறுபாடு இல்லாமல் போகுமாயின் கிருத்துவர்கள் பல தெய்வங்களை வணங்குவதோ, எந்தத் தெய்வத்தையும் வணங்காமலிருப்பதோ தடுக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்க முடியாது. அதாவது, மனிதனுக்கு ஆன்மீகம் சார்ந்த சுதந்திரம் இவ்வரலாற்று மறுப்பால் கிட்டும். இந்த சுதந்திரத்தை வலியுறுத்துபவர்கள் இவ்வரலாற்றை எதிர்க்கிறார்கள். இந்த சுதந்திரத்தை எதிர்த்து மனிதர்களை தங்களுடைய தேவைகளுக்காகக் கைக்குள் வைத்திருப்பவர்கள் இவ்வரலாறு குறித்த உண்மையை நிறுவுவதாகச் சொல்லுகிறார்கள்.

உதாரணமாக பல வருடங்களாக ஏசுவை புதைத்தபோது அவரைச் சுற்றியிருந்த துணியாக ஒரு துணியை வத்திக்கான் வைத்திருந்தது. அதை அறிவியற்பூர்வமான ஆராய்ச்சிக்கு அவர்கள் அனுமதிக்கவேயில்லை. அனுமதித்தபோது, அந்த துணியும் ஏசுவின் காலமாய் சொல்லப்பட்டுகிற காலத்தைச் சேர்ந்ததில்லை என்பதும், அதில் தென்படும் ஏசுவின் உருவம் சூடான இரும்புக்குழாய்களின்மேல் வைத்துத் தயார் செய்யப்பட்டது என்பதும் தெரிய வந்தது.

இவைகள் ஒருபுறம் இருக்கின்றன. இதற்கிடையில் வேறொன்று. சிறில், உங்கள் கருத்துப்படி ஏசுவின் வரலாற்றை ஆதரித்து சொல்லபப்டும் கருத்துக்களுக்கிணையாக, அதை எதிர்த்து சொல்லப்படுகின்ற கருத்துக்களும் இருக்கின்றன. இத்தகைய இரு எதிர் கருத்துக்களும் வலுவாக இருக்கும் சூழ்நிலையில் காலத்தை BC (Before Christ) என்றும் AD (Anno Domino) என்றும் குறிப்பிடுவது சரியானதுதானா? அதற்குப் பதிலாக BCE (Before Common Era) என்றும் CE (Common Era) என்றும் பெரும்பாலான யூரோப்பிய நாடுகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனவே. இவற்றை பல்வேறு சமுதாயத்தினர் வாழும் இந்தியாவிலுள்ள வரலாற்றுப் பாடபுத்தகங்களிலாவது பயன்படுத்துவது குறித்துத் தங்கள் கருத்து என்ன?

3:08 AM, March 28, 2007  
Anonymous Anonymous said...

So how come Jesus be false then...?

When Nehru (the last British Prime minister of India) visited a lunatic asylum, he met a convincing character. He was intelligent, suave, well-versed, and secular. The interesting character asked for Nehru's name. Nehru told him, "My name is Pandit Jawaharlal Nehru and I am the current prime minister of India". For this the convincing character said, "oh, I see, but please do not tell anybody here. Because, they are keeping me behind the bar for having told the same."

Bangalore American

3:39 AM, March 28, 2007  
Blogger ரியோ said...

ம்யூஸ்,

BC, AD என்பதை BCE, CE என்று மாற்றுவது மத சார்பில்லாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த முறையிலும் கிறிஸ்துவின் பிறப்பின் அடிப்படையில்தான் வருடங்கள் கணக்கிடப்படும்.

அது சரி, BCE, CE(கி.மு, கி.பி) என்பதை தமிழில் எப்படி சொல்வது?

மாதங்கள், கிரகங்கள் போன்ற பலவற்றின் பெயர்கள் கடவுள்கள் பெயரையே நேரடியாகக் குறிக்கின்றன. அவற்றையும் மாற்ற வேண்டி வருமா?

5:14 AM, March 28, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பொது சகாப்தத்திற்கு முன் பின் என கொள்ளலாம். கடவுள்கள் பெயர் என்பதில் இல்லை பிரச்சனை. In the year of our lord எனும் பொருள் படும் AD என்பதுதான் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது.எருமை மாட்டுத்தோலும் மொந்தம்பழ மூளையும் கொண்ட இந்து ஏற்றுக்கொள்வான் ஆனால் ஏசுவின் வரலாற்றுத்தன்மை ஐயத்திற்கு உரியது என்பதும் யூத இஸ்லாமிய எதிர்ப்பும் இந்த மாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணம்.

5:21 AM, March 28, 2007  
Anonymous Anonymous said...

Bangalore american,

Are you saying that the person who is speaking to me daily is Ghost or Lunatic fellow..?...I dont go by any book or stories..I go by real experience in this world on my day today activities..

6:20 AM, March 28, 2007  
Anonymous Anonymous said...

Dear Stan,

Please take it as a joke.

I really respect your experience. It is rare for people to get such experience. As this is a rare experience, it is not uncommon for people to get curious about it. I too am curious.

Have you validated this experience with any other spiritually developed person?

I am asking this question because the life of St. Francis of Assissi brings us to note that the great saint has to come over the hallucinations that resembled speaking with Jesus, and getting his guidance. Only after he could come out of such hallucinations he could get the real light of life.

What makes you to be confirmed about this experience?

I am afraid that if it is not a real spiritual experience I cant help you further. So, this question is to find an answer for YOU; for your well-being.

If this is true, I really like to meet a person who is talking with the only son of the God, the Father to all life.

Bangalore American

7:12 AM, March 28, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

ம்யூஸ்,
:)

//முன்முடிவுகளை வைத்துக்கொண்டு அந்த முடிவிற்குத் தேவையான ஆதாரங்களைத் தேடுவதற்கு ஆராய்ச்சி என்ற பெயர் கொடுக்க இயலாது. வரலாற்றுப்போக்கில் நடைபெறும் இந்த அரசியற் செயல்களுக்கு ஃபாஸிஸம் என்று பெயர் கொடுத்துள்ளார்கள்.
//

இயேசுவின் வரலாற்றை இல்லை எனச் சொல்பவர்களும் முன்முடிவுகளோடேதான் செய்கிறார்கள் என்பதுதான் என் பாயிண்ட்.

பாசிச்சம், நிச்சயமாக எல்லா மதங்களும் பாசிசக் கொள்கைகளுடந்தான் வளர்ந்தன. இதில் சந்தேகம் இருக்குதா?

//ஆனால், அதே குறியீட்டு அழகியல்கள் வேறு ஏதேனும் கடவுளுக்குப் பயன்படுத்தப்படும்போது அவற்றை எதிர்ப்பது மத அரசியலைச் சார்ந்தது. //

இப்ப நீங்க சரியான வாதத்துக்க வந்துட்டீங்க.. ஆக நீங்க எதிர்க்கவேண்டியது இதைத்தானே தவிர இயேசுவின் வரலாற்றுத் தன்மையை அல்ல.

//ஸெலெக்டிவ் அம்னீஷியா மாதிரி இவை ஸெலெக்டிவ் சுயபரிஸோதனைகள்.
//
நீச்சயமாக இல்லை. திருச்சபை அங்கீகரிக்கும் விஷயங்கள் எல்லாமுமே போதுமான விளக்கங்களும் விவாதங்களும் முடிந்தபின்னரே பெறப்படுகின்றன. இதில் நம்பிக்கையை முன்வைத்த விளக்கங்களும் உள்ளன. பனிமலையில் லிங்கம் உருவாவது என்பவற்றை நம்பிக்கை கொண்டு விளங்கிக்கொள்வதுபோலத்தானிது.

சிலர் இதை மறுக்கலாம், சிலர் நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொள்ளலாம்.

இன்னொரு விஷயம் அறிவுபூர்வமான அடையாளங்கள் இன்றி கடவுளைப் புரிந்துகொள்வது கடினம். துவக்க நிலையிலாவது இது தேவைப்படுகிறது. இதனாலேயே மதங்களின் தத்துவங்கள் பின் துரத்தப்பட்டு சடங்குகளும், உணர்வுசார்ந்த விஷயங்கள் முன்னிலைப்படுத்தப் படுகின்றன. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக இத்தகைய அடையாளங்கள் எண்ணிலடங்காமல் இருக்கும் இந்து மதத்திற்கு.

இயேசுவின் வரலாற்றுத் தன்மையில் நீங்கள் என்ன அரசியலைப் பார்க்கிறீர்களோ அத்தகைய அரசியல் இந்துமத்த்தில் நிச்சயம் இருக்கிறது. இதை நீங்கள் மறுப்பீர்களானல் உங்கள் மதத்தையே நீங்கள் முழுதாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். அல்லது உங்கள் வார்த்தைகளில் சொன்னால் 'செலக்டீவ் அம்னீஷ்யா' உள்ளவர்கள் அப்படிச் சொல்லலாம்.

incidentally we are dscussing all these while celebrating Ram Jeyanthi.
இராம 'ஜென்ம' பூமியில் எழாத அரசியலா?

ஆக அரசியல் என்பது மதத்துக்கு உண்டான குணாதிசயம் மட்டுமால்ல தேவையானதும்கூட.

BC. AD பற்றிய வாதங்கள் அவ்வளவு ஆழமானதாக இல்லை.

உங்களுக்கு விருப்பமானதை பயன்படுத்துவதில் தவறில்லை. உலகம் முழுவதும் இதை மாற்றினாலும் நல்லதே. இதேபோல இன்னும் பல விஷயங்க்களும் வருமே..

ஏற்கனவே நம் தேசியகீதம் கேள்விக்குரியதாகிவிட்டது
அசோகரை கொடுங்கோலன் என்பவர்கள் சக்கரத்தை எடுக்கச் சொல்வார்கள்
காந்தியை வெறுப்பவர்கள் சத்யமேவர்ஹ ஜெயதே வேண்டாம் என்பார்கள். தமிழக சின்னத்தில் இந்துக் கோவில் எதற்கு என்பார்கள்.

இதையெல்லாம் பெரிதாய் எடுக்க முடியுமா? உங்களுக்கு என்ன விருப்பமோ அதை பயன்படுதுங்கள். இயேசுவே BCலதான் பிறந்தார்.

இப்ப உலகம் முழுவதும் பயன்படுத்துகிற காலண்டர் கத்தோலிக்க திருச்சபை வரையறுத்ததுதான். அதையும் தூக்கி போட்டுடலாமே. என்னைக் கேட்டால் BC AD ஒரு பெரிய விஷயமே அல்ல. யாராவது BC AD என இருப்பதால் இய்யேசுவின் வரலாறும் உண்மை என்றால் அதைவிட முட்டாள்தனமாய் எதுவும் கிடையாது. இதை பயன்படுத்துவது கூடாது என்பது வேண்டுமானால் அதைப் போன்றதாக இருக்கலாம்.

8:47 AM, March 28, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

//There is a general scholarly consent that Josephus never mentioned Jesus and the only mention that is attributed to Jospehus regarding Jesus is an interpolation by Christians.//

Interesting. So if someone can interpret History and say Jesus did not exist the same right is not available to somone who wants to 'interpret' as otherwise?

9:04 AM, March 28, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//முன்முடிவுகளை வைத்துக்கொண்டு அந்த முடிவிற்குத் தேவையான ஆதாரங்களைத் தேடுவதற்கு ஆராய்ச்சி என்ற பெயர் கொடுக்க இயலாது. வரலாற்றுப்போக்கில் நடைபெறும் இந்த அரசியற் செயல்களுக்கு ஃபாஸிஸம் என்று பெயர் கொடுத்துள்ளார்கள். //

õயூஸ் பொதுவாக தனக்கு பிடிக்காத விசயங்களுக்கு எல்லாம் பாசிச முத்திரை குத்தும் இடதுசாரித்தனம் நமக்கு வேண்டாமே. ஏசுவின் வரலாற்றடிப்படையை கத்தோலிக்க சபை முன்வைத்து மதம் பரப்ப கிறிஸ்தவம் முனைந்த நாள் முதல் - இயேசுவின் வரலாற்றடிப்படை கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள் முதல் - இன்று வரை கத்தோலிக்க சபை பல 'ஆதாரங்களை' முன்வைத்துள்ளது. ஒவ்வொன்றும் பொய்ப்பிக்கப்பட்டு வந்துள்ளன. பல நேரங்களில் இந்த முயற்சிகள் நேர்மையானவை என்ன சொல்ல முடியாத நிலையில்தான் நடந்தன. என்ற போதிலும் பாசிசம் என இதனை கூறுவது கடுமையானது.

//பாசிச்சம், நிச்சயமாக எல்லா மதங்களும் பாசிசக் கொள்கைகளுடந்தான் வளர்ந்தன. இதில் சந்தேகம் இருக்குதா?//
பாசிசம் என எதைக் கூறுகிறீர்கள் சிறில். பாசிசம் என்கிற பதத்தை நாம் அனைவரும் பயன்படுத்துகிற விதத்தில் எல்லா மசால்வடைகளும் பாசிச முறையில் செய்யப்படுவதாகக் கூட சொல்லலாம் என நினைக்கிறேன்.

//நீச்சயமாக இல்லை. திருச்சபை அங்கீகரிக்கும் விஷயங்கள் எல்லாமுமே போதுமான விளக்கங்களும் விவாதங்களும் முடிந்தபின்னரே பெறப்படுகின்றன. இதில் நம்பிக்கையை முன்வைத்த விளக்கங்களும் உள்ளன. பனிமலையில் லிங்கம் உருவாவது என்பவற்றை நம்பிக்கை கொண்டு விளங்கிக்கொள்வதுபோலத்தானிது.//
அப்படியெல்லாம் இல்லை சிறில். பரங்கி மலையில் தோமையார் தம் கையால் செதுக்கியதாக ஒரு சிலுவையை வைத்திருக்கிறார்களே...அடிப்படை வரலாற்று அறிவு கொண்ட எவரும் இது போலி என்பதனைகூறிட இயலும். வேண்டுமானால் சிலுவை வழிபாடு கிறிஸ்தவத்தில் தோன்றிய காலகட்டத்தையும் சிலுவையின் பலவித வரலாற்று பரிணாமங்களையும் நீங்களே சரி பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அகழ்வாராய்ச்சி, கிறிஸ்தவ குறியீடுகளின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படைகளுக்கு எதிராக இந்த நம்பிக்கையை கத்தோலிக்க சபை இந்தியாவில் பரப்பிடவில்லையா?

//இயேசுவின் வரலாற்றுத் தன்மையில் நீங்கள் என்ன அரசியலைப் பார்க்கிறீர்களோ அத்தகைய அரசியல் இந்துமத்த்தில் நிச்சயம் இருக்கிறது. இதை நீங்கள் மறுப்பீர்களானல் உங்கள் மதத்தையே நீங்கள் முழுதாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். அல்லது உங்கள் வார்த்தைகளில் சொன்னால் 'செலக்டீவ் அம்னீஷ்யா' உள்ளவர்கள் அப்படிச் சொல்லலாம். incidentally we are dscussing all these while celebrating Ram Jeyanthi. இராம 'ஜென்ம' பூமியில் எழாத அரசியலா?//

இல்லை என அடித்து சொல்லலாம் சிறில். Nevertheless you cannot compare the Hindu exceptions with Christian generalities. இயேசுவின் வரலாற்றுத்தன்மை - யூத விவிலியத்தை கிறிஸ்தவம் பயன்படுத்திய விதம் :இவற்றால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த பதிவுகளையும் இத்தொடரில் அளிக்க உள்ளேன். இராம ஜென்ம பூமியைக்குறித்து ஒருவிசயம் சிறில். அயோத்தியில் ஏற்கனவே கோவில் இருந்து இடிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு எங்கென்றாலும் அயோத்திக்குள்ளேயேயாக மசூதியை கட்டிக்கொள்ளலாம் என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. 'சரயூவின் கரை மசூதிக்கும் கோவிலுக்கும் இடமளிக்கும் அளவு விசாலமானது" என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் அறிக்கை. ஆனால் பெத்லகேம் நகருக்குள் ஒரு மசூதியை கட்ட இஸ்ரேல் அரசு முஸ்லீம்களுக்கு அனுமதி அளித்த போது போப் ஜான் பால் - 2 இஸ்ரேலுடனான உறவையே முறித்திட முன்வந்தார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் 'இராம ஜென்ம பூமியில் எழாத அரசியலா' என்பது எப்படி கிறிஸ்தவ நம்பிக்கை அரசியலிலிருந்து வேறுபட்டதென.

10:12 AM, March 28, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//பெத்லகேம் நகருக்குள்//Sorry in the town of Nazareth

10:16 AM, March 28, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

அரவிந்த்,
இராமெ 'ஜென்ம' பூமி என்னும் பதத்திலேயே அரசியல் ஒளிந்திருக்கிறது. கோயில் இருந்த இடங்களை இடித்துக்கட்டிய வரலாறுகளை, கோயிலே இல்லாஅதிருந்த மக்களிடம் கோயிலைக் கொண்டுவந்த வரலாறுகளையெல்லாம் திரும்பக் கொண்டுவந்தால் எவ்வளவுதூரம் வரலாற்றில் பின்னோக்கலாம் எனும் வரையறையும் செய்யவேண்டுமே?

என்னைக் கேட்டால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் என்ன நடக்கிறதோ அந்த வரலாற்றுக்கு முக்கியத்துவம் தந்தாலே போதுமானது.

தோமையாரின் சிலுவைக்கும் இராமர் பாலத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை மக்காளின் நம்பிக்கை குறித்தான விஷயம் அது. இதை பல சமயங்களில் திருச்சபை அனுமதித்திருக்கிறது. மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என.

இப்போதைய போப் தோமையார் இந்தியாவுக்கே வரவில்லை என்கிறார்.

//Nevertheless you cannot compare the Hindu exceptions with Christian generalities.//
இதுதான் உங்களுக்கு மிக சாதகமான பாயிண்ட்.

To have an exception there must be a standard. But is there a standard in hinduism? is Hinduism a definite religion? It is not. So there is no clear definition on what it exception and what is standard. It is left to you and me. That's why you could argue with me that Rama's bridge is not ture but would hesitate to talk to a public gathering of Hindus on this.

Because Hinduism is so free. A great feature. But very often mis used, just like freedom is misused all over the world.

8:39 AM, March 29, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

என்ற போதிலும் பாசிசம் என இதனை கூறுவது கடுமையானது.

பெரியவர்கள் சொல்லுகிறீர்கள். ஏற்றுக்கொள்ளுகிறேன்.

இனி "கிருத்துவம்" என்றே சொல்லிவிடுகிறேன் :-) !!!

மற்றபடி சிறிலுக்கு நீங்கள் சொல்லிய பதில்கள் என்னுடைய பதில்களிலிருந்து அதிகம் மாறுபடப்போவதில்லை என்பதால், தங்களுடைய அந்தக் கேள்விகளுக்கு அவருடைய பதிலை எதிர்பார்த்திருப்பது தவிர இப்போது செய்ய ஒன்றுமில்லை.

7:12 PM, March 29, 2007  
Anonymous Anonymous said...

வணக்கம். தங்கள் வாதத்தால் உண்மை உணர்ந்தேன். இதுநாள் வரை ஏசுவை வணங்கிய நான் இனி இந்துத்துவ பாதைக்கு திரும்பி பாரதத்தை மேம்படுத்துவேன்.

இனிமேல் கிறித்தவர்களின் கண்டுபிடிப்புகளான கம்ப்பியூட்டர், டெலிபோன், மின்சாரம் ஆகியவற்றை உபயோகிக்க மாட்டேன். நீங்களும்,மியூசிம் திருந்தி கிறித்தவர்களின் கண்டுபிடிப்பை உபயோகப்படுத்தவேண்டாம்.

நாம் இந்துக்கள் இணைந்து புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோம்.வாருங்கள் பாரதத்தை வலுப்படுத்துவோம்.

2:05 AM, March 30, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//That's why you could argue with me that Rama's bridge is not ture but would hesitate to talk to a public gathering of Hindus on this.//

On the contrary I have given talks to Swayam Sevaks on the same topic exposing the mythical nature of Rama Sethu

5:39 PM, April 01, 2007  
Anonymous Anonymous said...

Aravindan,

You can do it with SS, because they may have the inner search. The desire to know what is correct and accept new information. Perhaps you cannot do this with the public. You may not want to. You need not do it.

4:35 AM, April 30, 2007  

Post a Comment

<< Home