Tuesday, May 08, 2007

குழந்தை இலக்கியம்: ஒரு சகோதரரின் ஆதங்கம்

குமரி மாவட்ட கிறிஸ்தவ பரதகுல மக்களுக்காக வெளிவரும் 'குமரி பரவை' செப்டம்பர் 2005 இதழில் வெளிவந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உண்மையிலே மகிழ்ச்சி அடைகிறேன். தெளிந்த சிந்தனையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட இக்கட்டுரை ஒரு செயல் முனைப்பினை நமக்கு நல்க பாரத அன்னை அருள் புரியட்டும்.


என்ன என்ன வார்த்தைகளோ


A.ஜஸ்டின் திவாகர் (பொழிக்கரை)

அந்த Kinder Garten பள்ளியில் நுழைந்த உடனேயே மழலையரின் மலர்ந்த முகங்கள் வண்ண வண்ண முகங்கள் நெஞ்சை அள்ளும் வடிவங்கள் எங்கும் சந்தோஷம்.
பள்ளிவளாகத்தில் எல்.கே.ஜி இருக்கும் திசையில்தான் அதிக சப்தம் வந்து கொண்டிருக்கிறது. அங்கு மிஸ் எனப்படும் அந்த பெண்மணி அழகிய அபிநயத்துடன் ஆங்கில
குழந்தைகள் பாடல் (ரைம்) கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். 'Humpty Dumpty had a great fall' என்பதனை அவர் விழுந்து காட்டுவதும் குழந்தைகள் அதை
பார்த்து சிரிப்பதுவும் நன்றாகவே இருந்தது. யு.கே.ஜியிலும் அதே சிரிப்பு. ரைம் தான் வேறு. Jack and Jill இல் Jack fell down and broke his crown தான் நடைபெற்றது. மிஸ்ஸின் அபிநயமும் அற்புதமாக இருந்தது. மாலையில் வீடு திரும்பினால் அங்கும் ஒரு ஆக்ஷன் ரி-ப்ளேதான். ஆனால் ரைம்ஸ் வேறு.Hickery Dickery Dock - அந்த மணி ஓங்கி ஒரு அடி அடிச்சது பாரு எலி ஓடியே போச்சு என்ற இவரது அபிநயத்திற்கு ஏகோபித்த வரவேற்பு. சிறுவர்களின் சிரிப்பொலி.


இரவு படுக்கைக்கு சென்ற போது அன்றைய நினைவுகள் மகிழ்ச்சி தந்தன என்றாலும் ஆங்கில ரைம்களில் ஏதோ ஒரு வறட்சி இருப்பது சிந்தனைக்கு பிடிபட்டது.




  • Humpty Dumpty விழுந்ததில் மகிழ்ச்சி

  • Jack and Jill விழுந்ததில் மகிழ்ச்சி
  • Hickery - இல் எலி பயந்து ஓடியதில் மகிழ்ச்சி
  • Pussy cat - இல் வெள்ளைக்கார ராணியை பார்க்க சென்ற பூனை அரியணைக்கு கீழே இருந்த எலியை பயப்படுத்தியதில் மகிழ்ச்சி என்பதான ரைம்ஸ்கள்.
இவை சிந்தனையில் வறட்சியா அல்லது சிந்தனையின் வக்கிரமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.


லிட்டில் ஜானி விளையாடுவதற்காகவே 'மழையையே வராதே' என்று விரட்டுவதும், Black sheep ஐ - ஆட்டைப் பார்த்தாலே அதன் ரோமத்தை உரிக்க வேண்டும் என்பதும் எந்த வகையில் ஜீவகாருண்ய ஒழுக்கம்? மேற்கூறிய வரிகள் அனைத்தும் ஆங்கிலேயரின் வக்கிர எண்ணங்களின் வெளிப்பாடுகள்தான். நாமும் இதற்கு அடிமையாகிவிட்டோ ம். இந்த எண்ணங்களின் தாக்கம்தான் சினிமாக்களில் கவுண்டமணியும் செந்திலும் கோவைசரளாவும் வடிவேலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி உதைத்துக்கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வக்கிர உணர்வு பெற்ற ஆங்கிலேயரிடமிருந்தா நாம் மனித உரிமைகள் பற்றி ஜனநாயகம் பற்றி சிறுபான்மை பாதுகாப்பு பற்றி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?



"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
அறம் செய விரும்பு ஆறுவது சினம்
கூடிவிளையாடு பாப்பா
வானரங்கள் கனி கொடுத்து மந்தியுடன் கொஞ்சும்"
என்ற நமது சிறுவர் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கும் போது உற்சாகம் வரவழைப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கை நெறி இங்குதானே இருக்கிறது?

நமது சிறுவர் இலக்கியங்களில் வாழும் கலையை போதிக்கும் எவ்வளவோ வார்த்தைகள். வாழ்வியலைத் தொலைத்துவிட்ட ஆங்கிலேயரிடமிருந்து வாழ்க்கையை கற்றுக்கொள்ள நமது சிறார்களை பணிப்பது என்ன நியாயம்?




  • வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் தேசத்தில்

  • காக்கையையும் குருவியையும் பசுவையையும் நாயையும் தன்னோடு இணைத்துக்கொண்ட பாரதியின் தேசத்தில் இப்படியும் ஆங்கில ரைம்கள் தேவைதானா?

திருக்குறளையும், ஆத்திச்சூடியையும், உலகநீதியையும் கொன்றைவேந்தனையும் பாரதியின் பாப்பா பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொடக்க வகுப்புகளில் கற்பிக்கலாமே? வளரும் தலைமுறையினரை வாழும் நெறிக்கு அழைக்கலாமே!


நன்றி: குமரி பரவை செப்டம்பர் 2005

Labels: ,

9 Comments:

Blogger ஜடாயு said...

நல்ல கட்டுரை.

திண்ணையில் இதே விஷயம் பற்றி அ.முத்துலிங்கம் நெடுநாள் முன்பு எழுதியிருந்தார் - குருட்டி எலிகள் ஓடி விழுந்து அடிபட்டுக் கொள்வதை ரசிக்கும் பாடல் மிகவும் வக்கிரமாக இருப்பதாக (six blind mice.. see how they run).

"தமிழில் குழந்தைப் பாடல்கள்" என்ற தலைப்பில் நானும் இதுபற்றி எழுதியுள்ளேன் -
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309255&format=html
அப்போது ஆங்கில சூழலின் பொருத்தமின்மை, ஒட்டாத தன்மை என்பது என் கண்ணுக்குப் பட்டதே அன்றி, வாழ்க்கை நெறிகள் என்ற கண்ணோட்டத்தில் நான் இவற்றைப் பார்க்கவில்லை. இந்தப் பார்வையையும் தந்ததற்கு ஜஸ்டின் திவாகருக்கு நன்றி.

அமெரிக்காவில் கூட இந்தப்பழைய பிரிட்டிஷ்கால ரைம்ஸ்கள் மிகப் பிரபலம் என்று சொல்ல முடியாது

I can fly like a bird
I can sing like a bee
.. .
I am nothing and everything
Thats my way

என்ற அழகான பாடலை ஒரு மழலைப் புத்தகத்தில் பார்த்தேன். இந்திய ஆங்கிலப் பள்ளிகள் ரைம்ஸ்களை மறூபரிசீலனை செய்து இத்தகைய புதிய சுவாசமும், உற்சாகமும் தரும் பாடல்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.

1:40 AM, May 08, 2007  
Anonymous Anonymous said...

இந்த மழலையர் பாடல்களில் இப்படி ஒரு கோணம் இருப்பதை இதுவரை யோசித்ததேயில்லை. ஜஸ்டின் திவாகரின் கூற்று பளாரென்று அறைந்ததுபோல இருக்கிறது.

இதைப் பாடும் என் அண்ணன் மகன் தனது வாழ்வில் மகிழ்ச்சி என்பது அடுத்தவர் கீழே விழுவதிலிருந்து கிடைப்பதுதான் என்று யோசிப்பானா; கேள்விகள் எழுகின்றன.

என் மகள் இந்த பாடல்களை இனி பாடும்போது எனக்கு கவலை எழலாம்.

அடுத்தவர் வீழ்ச்சியில் மகிழ்ச்சி காணும் இவள் எத்தகைய தாயாக இருக்கப்போகிறாள்?

இந்த கவலையிலிருந்து விடுபட எனக்கு தெரிந்ததெல்லாம், ஜஸ்டினின் கூற்றுக்கள் அதீத பயத்தால் ஏற்பட்டவை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் நெருப்புக்கோழி வித்தைதான்.

2:05 AM, May 08, 2007  
Blogger கால்கரி சிவா said...

மற்றவர்களின் துன்பத்தில் ஏமாற்றத்தில் சந்தோஷம் கொள்வது எத்தனை குரூரம்.

கனடாவில் இரண்டு விளம்பரங்கள் என்னை உறுத்துகின்றன. ஒரு பர்னிச்சர் கடைவிளம்பரம் இந்த கடை வழக்கமாக விலை கம்மியாக விற்கும். இதையறித ஒரு மூதாட்டி பில் போட்டவன் ஏமாந்துவிட்டான் அவன் விழித்துக் கொள்வதற்குள் வண்டியை எடு என தன் கணவரை விரட்டுவார்.

இரண்டாவது ஒரு பிஸா கம்பெனியின் விளம்பரம். இதில் பிஸா கம்பெனி ஒரு பிஸாவின் விலையில் முன்று பிஸாக்கள் விற்கிறார்கள். இதையறிமால் வாங்கியவர் மீண்டும் பிஸா பில் போடும் இளைஞன் தவறு செய்துவிட்டான் என மகிழ்வான்.

மற்றவர்களின் தப்பில் ஆதாயம் அடையும் இவர்களின் மனநிலையை என்னவென்பேன்.

போனவாரம் ஒரு பாஸ்ட் புட் கடையில் 6 டாலருக்கு ஒரு மீல் வாங்கி 20 டாலரை தந்தேன். அவன் 14 க்கு பதில் 19 டாலரை திரும்பி தந்தான். நான் அந்த இளைஞனிடம் மீண்டும் 5 டாலரை திரும்பி தந்துவிட்டு இனிமேல் கவனமாக இரு என்றேன். அவன் 5 டாலரை திருப்பி தந்ததுற்கு தாங்க்ஸ் ஆனால் உன் அட்வைஸ் எனக்கு தேவை இல்லை என்றான். பிறகு அவன் சகதொழிலாளியிடம் என்னைப் பற்றி மிக மோசமாக கமெண்ட் அடித்தான். இவ்வளவு வக்கிரம் பிடித்தவர்கள் இந்த வெள்ளைக்காரர்கள். அவன் மானேஜரிடம் நான் கம்ப்ளைண்ட் செய்தேன்.

8:44 AM, May 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//மற்றவர்களின் துன்பத்தில் ஏமாற்றத்தில் சந்தோஷம் கொள்வது எத்தனை குரூரம். //
சிவா இதைத்தானே இவர்கள் உலகம் முழுக்க செய்து கொண்டிருக்கிறார்கள்!

8:51 AM, May 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

மேற்கத்திய நாகரிகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது மகாத்மா காந்தி 'Western civilizaion? it is a good idea' என்றாராம்.

8:52 AM, May 08, 2007  
Blogger அன்புத்தோழி said...

நல்ல கருத்துள்ள கட்டுரை திரு அரவிந்தன் நீலகண்டன். குழந்தைகளுக்கு நாமே மற்றவர்கள் விழுந்தால் சிரிப்பு என்று சொல்லிக்கொடுத்தால் நாளை அவர்களுக்கு மனதில் இந்த மாதிரி நினைப்பு தான் வரும். நம் முன்னோர்கள் சொல்லியதை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் மனம் விரிவடையும்.

12:57 PM, May 08, 2007  
Anonymous Anonymous said...

To bring this article, it is not enough to say Thanks and need to do Namaskar

11:00 PM, May 08, 2007  
Anonymous Anonymous said...

Please put this article as JPEG file to download.

11:45 PM, May 08, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

விவாதம் நன்றாகவே இருக்குது.

திருக்குறள் படித்து வளர்ந்த குழந்தைகளெல்லாம் உத்தமர்களாகும் என்கிற உத்திரவாதமுமில்லை jack and jill படித்தவர்களெல்லாம் கீழே பிடித்து தள்ளுவார்கள் என்கிறதும் இல்லை.

கவுண்டமணி செந்திலை அடித்தால் சிரிக்கலாம் என்கிற மனப்பான்மையை வேண்டுமென்றால் இது தரலாம்.

ஆனாலும் நம் குழந்தைகளுக்கு நம் இலக்கியங்களிலிருந்து பாடல்களை சொல்லித் தரவேண்டும் என்பது சிறப்பான சிந்தனையே.

வாழ்த்துக்கள்.

8:05 AM, May 22, 2007  

Post a Comment

<< Home