அகப்பயணம்

Monday, June 25, 2007

அழு என் தேசமே!

நாம் ஏன் அப்துல் கலாமை நேசிக்கிறோம்?
ஏனெனில் அவர் ஒரு மகத்தான ஆதர்சம்.
அவரது இலட்சியம் தேசத்தின் முன்னேற்றம்.
கடைசி பாரத குடிமகனும்
அனைத்து வளமையுடன்
தன்னிறைவு பெற்று வாழும்
பாரதத்தினை
உருவாக்கிட முனைந்ததோர் சக்தி
அவருடையது.
எத்தனை எத்தனையோ இலட்சம் குழந்தைகளின்
உள்ளங்களில் அந்த இலட்சிய சக்தி
தீபமேற்றியுள்ளது.
இடைவிடாத பயணங்களில்
அவர் ஆற்றிய ஆயிரக்கணக்கான உரைகளில்
அவர் ஏற்றிய உத்வேகம்
நம்மில் என்றென்றும்.
அவர் விட்டுச்செல்லும்
பாரத குடியரசு தலைவர் பதவியில்
இனி அவரது உயரத்தில் எவர் வருவார்?
அரசியல் வாதிகளின் தந்திரபூமியில்
உண்மையின் உயர்வு அவரில் ஒளி வீசியது.
தெய்வ சிலையை மீட்டவருக்காக
ராமேஸ்வர மசூதியில் நடந்த சிறப்பு பிரார்த்தனை ஆகட்டும்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக
கேரள கிறிஸ்தவர்கள் அளித்த தேவாலயம் ஆகட்டும்
இராமேஸ்வரம் கோயில் பிரார்த்தனையும்
மசூதி தொழுகையும் சேருமிடம் ஒன்று எனும்
குரலில் வெளிப்படும் அழிவற்ற பாரத தர்மத்தின் குரலாகட்டும்
மதங்கள் கடந்த ஆன்மிகத்தின் மூலம்
தேச பக்தியையும் தேசத்தின் வளர்ச்சியையும்
எண்ணுவதன்றி வேறறியா மனம் கொண்ட மாமனிதர் அவர்.

2020 இலோ அதற்கு முன்னரேயோ
வளமையான பாரதம் என்பது கனவல்ல
அடைய முடிந்த குறிக்கோள்
என சிம்ம கர்ஜனை புரிந்தவர் அவர்.
அவர் அகமகிழ்ந்த தினம் எது தெரியுமா?
விண்செல்லும் கலனின் வெப்பமேற்கும் சேர்மத்தால்
போலியோ தாக்கிய குழந்தையின்
செயற்கை கால் வலிமை கூடி எடைச்சுமை குறைந்திட
அக்குழந்தை புன்னகைத்த தினம்.
நம் தேச மக்கள் தம் துயர நேரங்களில்
அன்னிய தொழில்நுட்பத்துக்கு ஏங்குவதா என
ஏங்கி உழைத்ததன் விளைவுதான்
கலாம்-ராஜு இருதய ஸ்டென்ட்.
விண்வெளி முதல் இந்திய இருதயம் வரை
அவரது தொழில்நுட்ப ஆளுமையால்
கண்ணீர் துடைத்த அம்மகாத்மா
வாழும் காலத்தில் வாழ்ந்திட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எத்தனை அழகிய நூல்கள்!

மதங்களின் குறுகிய சுவர்கள் தடுக்காமல் பிரவாகித்த
ஆன்மிக வெள்ளமாக.
திருவள்ளுவரும் பதஞ்சலி முனிவரும் அவரது மேற்கோள்களால்
பாரதத்தின் வளர்ச்சிக்கு ஆசி கூறினார்கள்.
உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்
என்பது அவர் நூல்

அதிலிருந்து:
ஐயாயிரம் வருட பாரம்பரியத்தில் செழித்து தழைத்தோங்கி வரும் நாகரிகம் என்ற பொக்கிஷத்தைப் போற்றிப் பாதுகாத்து வரும் இந்தியாவிடம் உள்ளதனித்தன்மையுடன் சுடர் ஒளி பரப்பும்அதன் அரிய வளம் தொன்மையான ஞானம்.இந்த விலைமதிக்க முடியாத சொத்தை தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுமிக முக்கியம் . தேச நலனுக்கும் உலக அரங்கில் நம் தேசத்தின் தாக்கத்தை உணர வைப்பதற்கும் இது மிகவும் அவசியம்...ஒரு சிலர் உயர்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே ஒரு தேசம் உயர்ந்த தேசமாகிவிடாது. தேசத்தின் மக்கள் அனைவரும் உயர்ந்தவர்களாக இருந்தால்தான் அந்த தேசம் உயர்ந்த தேசம். இளைய தலைமுறையினர் கல்வியில் சிகரத்தை எட்டி தார்மீக நெறிகளாலும் சமூக நலனிலும் அக்கறை கொண்ட அருமையான மனிதர்களாக பிரகாசிக்க வேண்டும்.

அவருக்கு ஏன் பதவி?
இதோ அவரது சுய சரிதையிலிருந்து தியானிக்க சில வரிகள்.
தியானிக்க மட்டுமல்ல ...நம் தேசம் இழந்த வாய்ப்பினை எண்ணி நாணவும் தான்.
"...இந்தக் கதை என்னோடு முடிந்துவிடும்.
உலக வழக்குப்படி எனக்கு எந்த பரம்பரைச் சொத்தும் இல்லை.
நான் எதையும் சம்பாதிக்கவில்லை.
எதையும் கட்டி வைக்கவில்லை.
என்னிடம் எதுவுமே கிடையாது.
குடும்பம் மகன்கள் மகள்கள் ..யாருமே கிடையாது.
இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்
இதன் கோடிக்கணக்கான
சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன்
எனக்குள்ளிருந்து அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்.
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி." (அக்னி சிறகுகள் -பக். 370)

அழு என் தேசமே!
இம்மாமனிதரை நிராகரிக்க மனது வந்த அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தாயே
அழு.
பரம்பரைக்காக பண்பினை தியாகம் செய்யும் பதர்களால் ஆளப்படுவதற்கு ஆளானாயே
அழு.
அண்டோ னியா மைனியாக்களும்
அழகிரிகளும் கனிமொழிகளும்
லல்லு பிரசாத் யாதவ்களும்

உருட்டுக்கட்டை ரவுடிகளும்

ரவுடிகளுக்காக வாய்கூசாது பொய் பேசும் மஞ்சள் துண்டு பகுத்தறிவுகளும்
வழி நடத்த
சர்க்கரை ஆலை கடனேய்ப்பு பேர்வழிகளும்
இதர பரம்பரைகளின் விசுவாசி வாலாட்டிகளும்
மீண்டும் ராஷ்டிரபதி பவனை ஆக்கிரமிக்க
அழு என் தேசமே!

Labels: , ,

Tuesday, June 19, 2007

எகிப்திய ஃபாரோவின் உடலும் இஸ்லாமிய பிரச்சாரமும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். Peace என்கிற இஸ்லாமிய கண்காட்சி சென்னையில் நடந்தது. ஒரு நண்பரின் அழைப்பின் பெயரில் அதனைக் காண நான் சென்றிருந்தேன்.அந்த கண்காட்சியில் பல வண்ண காட்சி அமைப்புகள் செய்து வைத்திருந்தனர். அதில் ஒரு எகிப்திய மம்மியின் படமும் இருந்தது. எகிப்திலிருந்து மோசஸ் (இஸ்லாமிய மரபில் இவரை மூஸா நபி என்கின்றனர்) யூதர்களை அழைத்து சென்ற போது, அவரை துரத்திய ஃபாரோ மன்னனின் படை நீரில் மூழ்கியதாகவும் அப்போது மன்னன் தான் மோஸஸ் மற்றும் ஆரோனின் (இஸ்லாமிய பெயர் ஹாரூன்) இறைவனை நம்புவதாக கூறியதாகவும், இதனையடுத்து 'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்' என்று இறைவன் கூறியதாக குர்-ஆன் (10::92) கூறுகிறது. இது அண்மைக்கால அகழ்வாராய்ச்சியின் போது நிரூபிக்கப்பட்டதாக இந்த ஃபாரோவின் மம்மியைக் காட்டி அவர் கூறினார். மேலும் அது மம்மியே அல்ல என்றும் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட உடல் என்றும் அது பின்னர் அகழ்வாராய்ச்சியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உடலை பாதுகாக்கும் முறைகளை நன்றாக அறிந்த இக்காலத்தில் கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இது இறைவன் அருளிய திருமறையே குரான் என்பதனை நிரூபிப்பதாகவும் அவர் கூறினார். எனக்கென்னவோ அந்த கண்காட்சியில் காட்டப்பட்டது மம்மி (பழங்கால எகிப்தில் சடங்கு ரீதியாக பதப்படுத்தப்பட்ட சடலம்) என்றே தோன்றியது. ஆனால் அந்த நண்பர் அதனை மறுத்தார். மிக எளிதாக விக்கிபீடியாவில் அந்த கண்காட்சியில் காட்டப்பட்ட அதே மம்மியின் படத்தினை ராம்ஸே-2 என அறிந்த போது எனக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. இவ்வளவு தெளிவாக தெரிகிற வரலாற்று விஷயங்களைக் கூடவா மத நம்பிக்கைக்காக புரட்டுவார்கள். பாவம் எத்தனை அப்பாவிகள் இதனை நம்புகிறார்களோ என கழிவிரக்கம் கூட உண்டாயிற்று. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு பின்னர் இதே விஷயத்தை இணைய வலைப்பதிவுலகத்திலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என நான் கனவிலும் கருதவில்லை. இதோ அந்த இஸ்லாமிய வலைப்பதிவில் அளிக்கப்பட்ட விஷயத்தை அப்படியே தருகிறேன்:
மோஸஸ் செங்கடலை பிளந்து தன் மக்களை அழைத்துச் செல்லும் காட்சி ஆபிரகாமிய மதங்களில் ஒரு முக்கியமான தொன்மமாகும்.
"வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நைல் ஆற்றங்கரையின் ஓரத்தில் லுக்ஸார் என்ற அழகிய சிற்றூர். இந்த லுக்ஸாரில் 'அரசர்களின் ஓடை' என்ற பெயரில் ஒரு பள்ளத் தாக்கு இருக்கிறது. அங்குள்ள தீபிஸ் என்ற பகுதியில் 1898 ஆம் ஆண்டு மம்மீஸ் (சடலங்கள்) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த லோனேட் என்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் அங்கிருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்தார்.அது உடனடியாக கெய்ரோவிலுள்ள ராயல் மியூஸியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பட்டது. அந்த சடலம் கண்டெடுக்கப் பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. இப்போது அந்த சடலம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் எகிப்திய அரசப் பரம்பரையில் வந்த யாரோ ஒரு பாரோ மன்னனின் சடலம்தான் அது எனவும் இன்றைய அராய்ச்சியாளர்கள் அனைவருமே பெரும்பாலும் ஒத்துக் கொண்டு விட்டனர். எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் மியூஸியத்தில் பார்வையாளர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பழம் பெரும் சடலம் குர்ஆன் கூறும் ஃபிர்அவுனின் உடலே! முகமது நபியின் காலத்திலேயே இந்த உடல் வெளிப் பட்டிருக்குமானால் யுக முடிவு நாள் வரை அந்த உடலை பாதுகாக்கும் வசதி அந்த மக்களிடத்தில் இல்லை, உடலும் அழுகிப் போய் விடும். எனவே தான் விஞ்ஞானம் வளர்ந்த இந்நாளில் இறைவன் அந்த உடலை வெளிப்படுத்துகிறான். எகிப்து சென்றவர்கள் அந்த உடலை நேரிலேயே பார்க்கலாம். 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் பார்த்திருக்கலாம். குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!"
இந்த
அருமையான கட்டுரைக்கு வந்த மறுமொழிகளில் ஒன்று கூறுகிறது:
"பிர் அவுன் எனப்படும் PAROH, பிரமிடுகளில் ஒன்றைக் கட்டியவன். இன்றளவும் உலகமே பிரமிடு எப்படித்தான் கட்டப்பட்டிருக்கும் என்று ஊகங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு அக்காலத்தில் விஞ்ஞானத்தில் வளர அல்லாஹ் பிர்அவுனுக்கு அறிவை அளித்திருந்தான். இறுமாப்பெய்திய பிர்அவுன் தன்னை இறைவனாக வணங்கும்படி அனைவருக்கும் உத்தரவிட்டான். தான் இறந்த பிறகு தன் உடலைப் பாதுகாப்பதற்காக ஒரு பிரமிடை பிரமாண்டமாகக் கட்டிய அந்த பிர்அவுனுக்கு ஆண்டவன் அளித்த பரிசு என்ன தெரியுமா? அவன் உடல் அந்த பிரமிடுக்குள் இல்லாமல் போகச் செய்ததுதான். ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு பெரிய பிரமிடுக்குள் மம்மி இல்லாது போன காரணம் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர், இஸ்லாமிய அறிஞர்கள் தான் அந்த விளக்கத்தை குர்ஆனின் மூலம் எடுத்துக் காட்டினர்."
இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு விளக்கத்தை திருவாளர் சுவனப்பிரியன் கொடுக்கிறார்:
"இப்போது மியூஸியத்தில் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் மன்னனின் உடல் பாடம் செய்து வைக்கப் பட்ட உடல் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பிரவுன் என்ற அரசன் இறைவனால் மூழ்கடிக்கப் படுகிறான். மூழ்கடிக்கப் பட்ட உடல் கரையோரம் ஒதுங்கி பனிப் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறது. கடல் நீரினுள் உள்ள உப்பும், பனிக் கட்டிகளும் அந்த உடலை போன நூற்றாண்டு வரை கெடாமல் காத்து வந்தன. குளிர் சாதன வசதிகள் ஏற்பட்டு விட்ட இன்றைய காலத்தில் மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் அந்த உடலை நாம் வாழும் காலத்தில் வெளியாக்குகிறான். இதைத்தான் நானும் விளக்கியிருக்கிறேன்."
பார்க்க:http://suvanappiriyan.blogspot.com/2006_07_01_archive.html

மேலே கூறப்பட்டிருப்பவை உண்மையா?

முதலில் 'அரசர்களின் ஓடை'யில் நடந்த கண்டெடுப்புகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

எகிப்தின் பழமையான அரச பரம்பரையினரின் (ஒன்றாம் பரம்பரையினர் முதல் எட்டாம் பரம்பரையினர் வரைக்குமான) கால கட்டம் என்பது கிமு 2950-2150 ஆகும். இக்கால கட்டமே பொதுவாக பிரமிடுகளுக்குள் அரச உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்ட காலகட்டம். இந்த காலகட்டத்திலிருந்து ஏறக்குறைய 50 பிரமிடுகள் காலத்தின் கொடுமைகளுக்கு தப்பித்து நிற்கின்றன என்ற போதிலும் புதையல் தேடுவோரினால் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகப்பெரிய பிரமிடு குஃபு (Khufu அல்லது பொதுவாக சியோப்ஸ் என்றும் அறியப்படும்)எனும் பாரோவால் கிமு 2550 இல் கட்டப்பட்டதாகும். இவரது உடலைத்தான் காணவில்லை. இது அகழ்வாராய்ச்சியாளர்கள் வருவதற்கு முன்னால் அங்கு வந்த புதையல் திருடர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிற்கால எகிப்திய அரசகுல பழக்க வழக்கங்கள் மாறலாயின. கிமு 2125 முதல் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு எகிப்தில் குழப்பங்கள் ஏற்பட்டன. பின்னர் தெளிவான ஆட்சி அமைப்பு ஓரளவுக்கு ஏற்படுகிறது. இதனையடுத்து ராஜ உடல் அடக்கங்கள் நைல் நதியின் மேற்கு கரைக்கு மாற்றப்படுகின்றன. இதுவே நாம் 'ராஜாக்களின் பள்ளத்தாக்கு' என அறியப்படும் பகுதி. கிமு 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 11-ஆம் நூற்றாண்டு வரைக்குமான எகிப்திய வரலாற்றினை நாம் இங்கு காணலாம். இங்குதான் 18 ஆம் வமிச எகிப்திய அரசர்கள் பெரும் அடக்க அறைகளில் பாடமிட்டு அடக்கம் செய்யப்பட்டனர். 19 ஆவது மற்றும் இருபதாவது வம்ச அரசர்களும் இங்கே இறுதி துயிலுக்காக பெரும் அடக்க அறைகளை அமைத்து துயில்கின்றனர். இங்கு அடக்க அறை அமைத்தவர்களுள் ராமிஸேஸ்-2 மற்றும் ராமிஸேஸ்-3 ஆகியோரும் அடக்கம் (no pun intended).ராமிஸேஸ்-2 மம்மி (செயற்கையாக எகிப்திய பூசாரிகளால்/மருத்துவர்களால் பதப்படுத்தப்பட்ட சடலம்) 1881 இல் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மி பின்னர் கெய்ரோ அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இஸ்லாமிய பிரச்சார படங்களில் காட்டப்படுவது இந்த மம்மியைதான். இது நீரில் மூழ்கி இறந்த சடலம் இல்லை என்பதனை இங்குகுறிப்பிட வேண்டும். இவரது பதப்படுத்தப்பட்ட சடலத்தை மிக நுண்ணிய முறையில் அறிவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர். ராமிஸேஸின் மரணம் அவரது பல்லில் ஏற்பட்ட புண் வீங்கி சீழ் பிடித்ததால் ஏற்பட்டதாகும். 90 வயது வரை இருந்த இந்த ஃபாரோ தன் இறுதி காலத்தில் எல்லா முதியவர்களையும் போல மூட்டுவலியால் அவதிப்பட்டார் என்பதையும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எக்ஸோடஸ் எனப்படுவதே ஒரு தொன்மம். பல நாட்டார் வழக்குகள், முந்தைய தொன்மங்கள் ஆகியவற்றிலிருந்து காலப்போக்கில் உருவானதோர் கதையாடலே அது எனவே அதற்கான ஆதாரங்களை வரலாற்றிலும் அகழ்வாராய்ச்சியிலும் தேடிக்கண்டடைவது கடினம் என்றே வரலாற்றாசிரியர்களும் பெரும்பான்மையான எகிப்தியவியலாளர்களும் கருதுகின்றனர். என்ற போதிலும் வரலாற்றிலும் அகழ்வாராய்ச்சியிலும் தமது மத நம்பிக்கைகளுக்கு ஆதாரங்களைத் தேடுபவர்கள் தொடர்ந்து பல ஃபாரோக்களை விவிலியம் கூறும் யாத்திராகம வில்லனான ஃபாரோவாக அடையாளம் காண முயற்சித்தே வந்துள்ளனர். புராணங்கள் (ஐதீகங்கள், தொன்மங்கள், புராதன மதநம்பிக்கைகள்) வரலாற்றுக்கருவினைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவை காலங்கள்தோறும் தொன்ம விரிவாக்கம் அடைவன. எனவே வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மத நூல்கள் விவரிப்பவை அகழ்வாராய்ச்சியால் உறுதிபடுமென நினைப்பவர்கள் மிகவும் மோசமான தவறினை செய்பவர்களாவர். எனினும் நம்பிக்கையாளர்களால் பைபிள் (பின்னர் குரான்) கூறிய ஃபாரோவாக அடையாளம் காணப்பட்ட ஃபாரோக்கள் பின்வருவோர் ஆவர்:


  • அஹ்மோஸ்-1 ஆட்சிக்காலம் கிமு 1550-1525. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது எகிப்திய லக்ஸார் மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1881. இது அஹ்மோஸ்ஸின் மம்மிதானா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
  • தட்மோஸ்-3: ஆட்சிக்காலம் கிமு 1479-1425. இரண்டு ஆண்டுகள் மகனுடன் இணை ஆட்சி செய்துள்ளார். இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1881.
  • அமென்கோதப்-2: ஆட்சிக்காலம் கிமு 1427-1400) இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1898
  • சேத்தி-1: ஆட்சிக்காலம்: கிமு 1294-1279 அல்லது 1290-1279. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1817
  • ராமிஸேஸ்-2: ஆட்சிக்காலம்: கிமு 1279-1213. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1881
    இதில் காணப்படும் முகம் ராமிஸேஸின் மம்மியிலிருந்து அவரது முகம் எவ்வாறு இருக்கும் என மீளமைக்கப்பட்டதாகும். நன்றி: டிஸ்கவரி சானல்
  • மெர்னப்தா: ஆட்சிக்காலம்: கிமு 1213-1203 இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1898
ஆக, சுவனப்பிரியன் கூறிய '1898-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட' அமென்கோதெப்-2 மற்றும் மெர்னப்தா ஆகிய இரு ஃபாரோக்களின் உடல்களுமே மம்மிகள் ஆகும். இயற்கையாக அல்ல செயற்கையாக பதப்படுத்தப்பட்டவை. இஸ்லாமிய கண்காட்சியிலும் இஸ்லாமிய பிரச்சார தளத்திலும் காட்டப்படுவதும் ஃபாரோ ராமிஸேஸ்-2 இன் செயற்கையாக பதப்படுத்தப்பட்ட உடலே ஆகும். இது குறித்து சில தொழில்முறை எகிப்தியவியலாளர்களுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களிடம் இஸ்லாமிய பிரச்சாரத்தையும் என்னுடைய ஐயங்களையும் கூறினேன். விவிலியத்திலும் குரானிலும் முக்கிய இடம் வகிக்கும் எக்ஸோடஸ் எனும் யாத்திராகம் ஒரு வரலாற்று நிகழ்வாக இருப்பதை விட ஐதீகக்கதையாடலாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என கூறினேன். அப்படி இருக்கையில் எகிப்தின் கெய்ரோ மியூசியத்தில் இருக்கும் ஒரு மம்மியைக் காட்டி இப்படி செய்யப்படும் பிரச்சாரம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை அல்லவா எனக் கேட்டிருந்தேன்.

பேரா. ப்ராங்காய்ஸ் டுனாண்ட் இருபதாண்டுகளுக்கு மேலாக எகிப்திலுள்ள கெய்ரோ-பிரெஞ்சு அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி ஆராய்ச்சி செய்தவர். அவரிடம் இது குறித்து கேட்டிருந்தேன். அவர் பதிலளித்தார்:

"உன்னுடைய ஐயங்களை நான் ஒத்துக்கொள்கிறேன். முதலாவதாக எகிப்தின் புதிய ராஜ்யத்தில் அனைத்து ஃபாரோக்களும் மம்மிகளாக்கப்பட்டனர் என்பதால் ராஜ மம்மி 'இயற்கையாக பாதுகாக்கப்பட்டது' என்று கூறப்படுவது குறித்து ஆச்சரியமடைகிறேன். இரண்டாவதாக நீ அறிந்திருப்பதைப் போல மோஸஸ் செங்கடலை கடந்தது என்பது பெரும்பாலும் ஐதீகக்கதைதான். மோஸஸையும் அவரைச்சார்ந்தவர்களையும் கடல் வழியாக துரத்திச் சென்ற ஒரு ஃபாரோவைக் குறித்து எவ்வித வரலாற்று வழக்கும் இல்லை.குரானின் இது குறித்த விவரணத்தை ஒரு மதச்சமாச்சாரம் என்கிற விதத்தில் நாம் புரிந்து கொள்ளலாமே ஒழிய வரலாற்று ரீதியாக அல்ல."
(புதிய ராஜ்யம் அல்லது Newkingdom என்பது மேலே கூறிய எகிப்திய அரசர்களின் காலகட்டமாகும். ஏறக்குறைய கிமு 1500களின் தொடக்கத்திலிருந்து கிமு 1000 வரைக்குமான காலகட்டம் எனலாம்.)

மேலும் பிரபல எகிப்தியலாளர் மற்றும் உரையாளர், ஆசிரியர் டைலான் பிக்கர்ஸ்டாஃபே என்பவர் சுவனப்பிரியன் குறிப்பிடும் பகுதியைச் சார்ந்த மம்மிகளைக் குறித்தே ஒரு நூலினை எழுதியவர். எனவே அவரிடம் இதே ஐயங்களை எழுப்பினேன். அவர் பதிலளித்திருந்தார்:

"பலரும் எகிப்திலிருந்து மோஸஸ் மக்களை மீட்டதை வழக்குக் கதை (folktale) என்றே கருதுகின்றனர். அதனை நம்புகிறவர்களும் கூட (1898 இல் கண்டெடுக்கப்பட்ட மம்மியான) மெர்னெப்தா அந்த ஃபாரோவாக இருக்க முடியாதென்பதில் ஐயம் கொண்டவர்களாகவே உள்ளனர். மேலும் அந்த ஃபாரோவும் மூழ்கியதாக கதையும் கூறவில்லை. மெர்னெப்தா மம்மியில் பதப்படுத்தப்பட்ட அலங்காரப் பொருட்களின் விளைவாக இருந்த வெள்ளை தடங்களை ஒரு காலத்தில் சிலர் கடலில் மூழ்கியதால் ஏற்பட்ட உப்பரிப்பு என கூறிவந்தனர். அனைத்து மம்மிகளிலும் நேட்ரான் எனப்படும் பதப்படுத்தப்படும் பொருள் உபயோகிக்கப்படுவதால் உப்பு கட்டாயமாக இருக்கும். மெர்னெப்தா மம்மியும் அதற்கு விலக்கல்ல."
மேலும் இஸ்லாமிய பிரச்சார தளத்தில் காட்டப்பட்ட ஃபாரோவின் உடலைக் குறித்து அவர் கூறினார்:
" இங்கு காட்டப்படும் மம்மி நிச்சயமாக ராமிஸேஸ்-2 தான். இப்புகைப்படம் கெய்ரோ மியூசியத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது நிச்சயமாக வழக்கமான முறையில் பதப்படுத்தப்பட்ட மம்மியேதான். மிகச்சிறந்த மம்மிக்கு உதாரணமாக இது திகழ்கிறது. ஏனெனில் அது புதையல் வேட்டைக்காரர்களால் அதிக சேதப்படுத்தப் படாதது."

இதில் இறுதியாக மற்றொரு கூத்தையும் குறிப்பிட்டே ஆகவேணும். டாக்டர். மவுரிஸ் பௌகாலே ஒரு பிரஞ்சு மருத்துவர். அன்வர் சதாத் மற்றும் சவுதி அரசகுடும்பத்துக்கு மருத்துவராக இருந்தவர். "குரானும் பைபிளும் : அறிவியலின் பார்வையில்" எனும் இஸ்லாமிய பிரச்சார நூலை எழுதியவர். இவர் மெர்னப்தாவின் மம்மியை 'தீவிரமாக' ஆராய்ச்சி செய்திட எகிப்திய அரசினால் அனுமதிக்கப்பட்டார். இந்த 'ஆராய்ச்சியின்' முடிவாக அவர் மெர்னப்தா குரான் சொல்வது போல வெள்ளப்பெருக்கில் அடிபட்டு இறந்ததற்கு அத்தாட்சி இருப்பதாக கூறுகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிவியல் எழுத்தாளர் இவரது நூலை விமர்சிக்கையில் கூறுகிறார்: "ஆனால் பிளந்து மூடிய நீர்திரை எப்படி தலைக்காயத்தை ஏற்படுத்தும் என்பதனை அவர் விளக்கவில்லை." உண்மையில் மெர்னப்தா ஏறத்தாழ தமது 60 ஆவது வயதில் அரியணை ஏறி பின்னர் பத்து வருடங்களுக்கு ஆண்டிருக்கிறார். தமது எழுபதாவது வயதில் காலமாகியிருக்கிறார். இவரைக்குறித்த முக்கியமான விஷயம் இவரது வெற்றி தூண்ணில் இவர் பொறித்துள்ள வாசகங்கள் ஆகும். கிமு 1207 ஆண்டு பொறிக்கப்பட்ட இவ்வாசகங்கள் கானான் பிரதேசத்தை இவர் படையெடுத்தது குறித்தும் இஸ்ரேலினை படையெடுத்து தோற்கடித்தது குறித்தும் பேசுகிறது. முதன்முதலாக இஸ்ரேல் தேசத்தைக் குறித்து யூத பைபிளுக்கு வெளியே பேசும் ஆவணம் என்ற முறையில் முக்கியத்துவம் பெறும் இது எக்ஸோடஸ் தொன்மத்துடன் இந்த ஃபாரோவை இணைப்பதையும் பொய்ப்பிக்கிறது. மோஸஸ் கடல் கடந்து சென்று ஸ்தாபிதம் செய்த ஒரு தேசத்தை எப்படி அவரைத் தொடர்ந்து கடலில் மூழ்கிய ஃபாரோ தனது வாழ்க்கை முடிவதற்கு நான்கு-ஐந்து வருடங்களுக்கு முன்னர் கல்வெட்டில் பொறிக்க முடியும்?

கிமு 1207 மெர்னப்தா வெற்றித்தூண்
மேலும் இந்த மம்மியின் மீதிருந்த உப்பு நம்பிக்கையாளர்களுக்கு கொடுத்த நம்பிக்கையும் எப்படி பொய்த்தது என்பதனை பிக்கர்ஸ்டாஃபே விளக்கியதையும் பார்க்கும் போது பௌகாலேயின் முடிவுகள் எப்படி உண்மையைக் காட்டிலும் பிரச்சாரமே என்பது தெளிவாகிறது. இப்படி அறிவியல்/தொழில்நுட்ப பட்டம் பெற்ற சிலரை மதத்திற்காக பிரச்சாரம் செய்ய வைக்கும் பிரம்மாண்ட பிரச்சார இயக்கத்தை சௌதி அரசு நடத்தி வருவதை ஏற்கனவே பேராசிரியர் வில்லியம் ஹே விளக்கியிருந்தார்.

ஆக, மதப் பிரச்சாரகர்கள் இனியாவது தாங்கள் கூறும் அத்தாட்சிகளில் கவனமாக இருக்க வேண்டும்.தங்களது நேர்மைக்கேடான சிறுமதியால் புராணக்கதைகளுக்கு அறிவியல் சான்று காணும் முயற்சிகளை -நாஸா புகைப்படங்கள் முதல் எகிப்திய மம்மிகள் வரை- கைவிட்டு உண்மையான ஆழமான ஆன்மிக அக-வாழ்வுக்கான வழிகாட்டிகளாக தொன்மங்களை பயன்படுத்தினால் இவ்வுலகம் எத்தனையோ நன்றாக மாறும்.

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்.


ஸப்கோ சன்மதி தே பகவான்.

மேலதிக விவரங்களுக்கு:

  • http://en.wikipedia.org/wiki/Ahmose_I
  • http://en.wikipedia.org/wiki/Amenhotep_II
  • http://en.wikipedia.org/wiki/Thutmose_III
  • http://en.wikipedia.org/wiki/Merneptah_Stele
  • http://en.wikipedia.org/wiki/Seti_I
  • http://en.wikipedia.org/wiki/Ramesses_II
  • http://en.wikipedia.org/wiki/Merneptah_I
  • http://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CE7DA173BF930A35751C0A967958260
  • http://www.nationalgeographic.com/pyramids/timeline.html
  • http://www.nationalgeographic.com/egyptjournal/valley.html

Labels: , , ,

Thursday, June 14, 2007

சைத்தானின் தொன்ம மாற்றம்-1: ஏசு வரலாற்றடிப்படையும் அப்பாலும்:

யோபு: அதிகாரம்:1
7.ஆண்டவர் சாத்தானிடம், எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான்.
8. ஆண்டவர் சாத்தானிடம், என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார்.
9. மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?
10. அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா?
11.ஆனால், உமது கையை நீட்டும்: அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான் என்றான்.
12. ஆண்டவர் சாத்தானிடம், இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே: அவன்மீது மட்டும் கை வைக்காதே என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.
...
16. இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.


யூத விவிலியத்தில் நாம் பார்ப்பது சைத்தான் யஹீவா தேவனின் ஊழியனாக இருக்கிறான். இன்னும் கூறினால் யஹீவா தேவனின் நெருப்பு சைத்தானின் வழியாகவே செயல்படுகிறது. உலக நடப்பை யஹீவா தேவனுக்கு சொல்பவனாகவும் இருக்கிறான். இருவரிடத்திலும் எதிரி மனோபாவம் இல்லை. அவன் மானுடரைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் இது மாறுகிறது. இந்த தொன்ம மாற்றத்தின் பலகாரணிகளும் இதன் வரலாற்று விளைவுகளும் கிறிஸ்தவத்திற்கு உரியவை - கிறிஸ்தவத்திற்கு மட்டுமே உரியவை.
கிறிஸ்தவத்தில் சைத்தான் ஒரு விசித்திரமான கருத்தாக்கம் ஆகும். அக்கருத்தாக்கத்தை பிற்கால யூதத்தில் காணமுடியும் என்றாலும் அதன் வேர்களை யூத பண்பாட்டின் மீதான பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் தாக்கத்திலிருந்தே அடையாளப்படுத்துகின்றனர் அறிஞர்கள். மானுடத்தை யஹீவா தேவன் முன்னால் குற்றம்சாட்டுபவனாக சைத்தான் யூத தொன்மத்தில் அறியப்படுகிறான். ஆனால் முழுமையான சாத்தானிய விவரணங்கள் கிறிஸ்தவ விவிலிய கதைகளிலேயே காணப்படுகின்றன. இதற்கான காரணிகள் பல. கொம்ரான் சுருளோலைகளில் காணப்படும் மத கருத்தாக்கங்களில் ஜராதுஷ்டிர இரு-தன்மை (dualist) சமயக்கண்ணோட்டம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை காணலாம். ஜராதுஷ்டிர சமயத்தில் அக்ரிமான் எனப்படும் இருட்சக்தி தலைவனின் தன்மைகள் மெதுவாக சாத்தானின் மீது படர்வதை காணமுடிகிறது. ஏசுவின் காலம் என கருதப்படுவதில் யூத பிரதேசத்தில் பல மறைஞான குழுக்கள் (mystic cults) இயங்கிவந்தன. இவை பெரும்பாலும் யூத மதத்துடன் பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் சில கவர்ச்சிகரமான கோட்பாடுகளை உள்ளடக்கியவையாக இருந்தன. இறுதிநாட்கள் உலக அழிவு குறித்த விவரணங்கள், சுவர்க்கம்-நரகம் குறித்த அதீதமான விவரணங்கள், ஒளிக்கடவுளுக்கு இருட்கண தலைவனுக்குமான போராட்டமாக தனி வாழ்க்கையையும் வரலாற்றையும் நோக்குதல் ஆகியவை யஹீவா வழிபாட்டுக்குழுவுடன் இணைக்கப்பட்டு இவற்றை மையம் கொண்ட இந்த குழுக்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தின் வலிமைக்கு அடிபணிந்ததாக இவர்கள் கருதிய யூத ஆச்சாரியர்களை கடுமையாக விமர்சித்தனர். தூய யூதத்தை ரோம வழிபாட்டு முறைகளால் களங்கப்படுத்தியதாகவும் இவர்கள் கருதினர். (ஆனால் இவர்களது 'தூய யூதமே' பாரசீகக் கலப்புடையது என்பது வேறு விசயம்) ஈஸீன்கள் எனப்படும் ஒரு குழுவினைக் குறித்து இதில் நமக்கு அதிகமான தரவுகள் கிடைத்துள்ளன. பலர் ஏசு இந்த மறைஞானக் குழுவினைச் சேர்ந்தவர் எனக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த குழு வேதாந்த தன்மைகொண்டதாக படித்த விவரம் தெரிந்த இந்துக்கள் கூட கருதுகின்றனர். ஆனால் வேதாந்தத்திற்கும் இந்த ஈஸீன் குழு கொண்டிருந்த கோட்பாட்டிற்கும் எட்டாம் பொருத்தம் என்பது பொதுவாக வெளியே தெரியாத விஷயம். ஆனால் கிறிஸ்தவத்தில் மிக அழுத்தமாக உருவாக்கப்பட்டு பின்னர் குரானிலும் உருவாகியிருக்கும் கருத்தாக்கமான சாத்தான் (ஷையித்தான்) அதன் பாரசீக -ஜராதுஷ்டிர தன்மை மாறாமல் ஈஸீன் கோட்பாடுகளில் 'சாவுக்கடல் சுருளேடுகள்' (Dead sea scrolls) - அதாவது அவை தெரிவிப்பது ஈஸீன்களின் கோட்பாடு என்பது உண்மையானால்- மூலம் தெரியவருகிறது. இடியாப்பக் குழப்பமாக சாத்தியகூறுகளாகவே இந்த விஷயங்களை கூறுவதற்கு மன்னிக்கவேண்டும். ஏனெனில் இவை அனைத்துமே இன்னமும் முழுமையடையாதவை. ஆனால் எதுவாயினும் சில விஷயங்களை நிச்சயமாக கூறமுடியும். ஈஸீன்களோ வேறெவரோ யூத மறை ஞானக்குழுக்கள் பொதுவான யூதசமுதாயத்திலிருந்து விலகி வாழ்ந்தன. அந்த குழுக்கள் பாரசீக-ஜராதுஷ்டிர சமயத்தின் கோட்பாடுகளை தன்னுள் வாங்கி அவற்றினை யூத இறையியலுடன் இணைத்து சில கற்பிதங்களை உருவாக்கியிருந்தன. அதில் சைத்தான் எனும் கருத்தாக்கத்தினை நாம் காணமுடிகிறது. யூத விவிலியத்தில் முழுமையான இறை-எதிரியாக முக்கிய பங்கு வகிக்காத சைத்தான் கிறிஸ்தவ விவிலியத்தில் முழுமையாக உருவாக்கி வருவதிலான இடைநிலை கண்ணியாக இதனை நாம் காணமுடியும். யூத விவிலியத்தில் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து யோபுவினை சோதனை செய்பவனாக சைத்தான் வருகிறான்.

Saturday, June 02, 2007

ஓர் உன்னத காதல் பாடல்-வீடியோ

என்னை எப்போதிருந்தோ இன்று முதல் என்றைக்கும் அதீதமாக பாதித்த கவர்ந்த பாடல். ஏங்கும் அந்த வாம்பயரில் என் முகத்தை பார்த்திருக்கிறேன்.
உன்னதமான ஒரு காதல்பாட்டு. காதல் ரசமும் அவலச்சுவையும் ததும்பும் இந்த அருமையான பாடலுக்கு என்றும் நான் அடிமை. மேற்கத்திய பாரம்பரியத்தின் பொதுமன நனவிலியில் புதைத்து வைக்கப்பட்ட, பொது பிரக்ஞையில் எதிர்மறை முத்திரை கொடுக்கப்பட்ட சில வலுவான தொன்ம வடிவங்களை உருவியெடுத்து மேல் கொணர்ந்ததோர் அழகிய பாடல். இரத்தக்காட்டேரி, அழகியும் அவலட்சண பூதமனிதனும் (Beauty and the Beast) என ஒரு Grand வீச்சு கொண்டபாடல் இது. எந்த காதலிக்கும் காதலன் ஒரு கணத்தில் பூதமனிதன் என்றே நினைக்கிறேன். அதற்கு மேல் சென்று அவன் நிரூபிக்க வேண்டும். அவள் கோட்டை மதில் சுவர் தடைகளையும் சமுதாய கற்பித tabooக்களையும் தாண்டி அவனை வந்தடைய. பின் அவனை மனிதனாக்க. இறுதியில் அவள் கேள்வி அவனது இரத்தக்காட்டேரித்தன்மையைக் குறித்ததல்ல அவன் தன்னவனாக மட்டுமே தன்னைவிட்டகலாதவனாக இருப்பது குறித்ததுதான். 'நான் அதை மட்டும் செய்யமாட்டேன்' என உருகும் வாம்பயர் மனிதனின் 'அது' எப்படி தொடக்கத்திலிருந்து இறுதியில் பொருள் மாறுகிறது என்பதனை கவனியுங்கள். நான் சொல்வது புரியும். இறுதியில் அவன் மனிதனாகிறான். அவள் வாம்பயராகியிருந்தால்?

Labels: , ,

Friday, June 01, 2007

ஏசு - வரலாற்றடிப்படையும் அப்பாலும்: பரிசுத்த ஆவி

கிறிஸ்தவ கலையில் வெள்ளை புறாவின் வடிவில் பரிசுத்த ஆவி காட்டப்படுகிறது. ஏசு கதையில் அவரது பிறப்பில் பரிசுத்த ஆவி முக்கிய பங்கு வகிக்கிறது. லூக்காவில் பரிசுத்த ஆவி ஏசுவின் தாயான கன்னி மரியாள் மீது கவிந்து அவளைக் கர்ப்பமாக்குவது குறித்து தேவதூதன் கூறுகிறார்.
கத்தோலிக்க பொதுஜன கலையில் காப்ரியேல் மேரிக்கு அவர் தேவ அன்னை ஆகப்போவதை உரைக்கும் காட்சி: யாஹீவா தேவனின் வல்லமை பரிசுத்த ஆவியின் புறாவடிவாக
"பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்"(லூக்கா 1:35)
மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் ஏசு கதையில் கூறுகையில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பின் விவரமாக
"...மரியாள் யோசேப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவரும் முன்னே அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது."(மத்தேயு 1:18)
என்கிறார். கிறிஸ்தவ ஓவியங்களில் இந்த காட்சி காட்டப்படுகையில் பரிசுத்த ஆவி அல்லது பரிசுத்த ஆவியின் ஆற்றல் ('உன்னதமானவருடைய பலம்') ஒரு புறாவாக காட்டப்படுகிறது. இங்கு பரிசுத்த ஆவி ஆண்தன்மையுடன் இயங்குகிறது என்பது வெளிப்படை. அதே நேரத்தில் பரிசுத்த ஆவியின் புறாவடிவம் ஏசுகதையின் பிறிதொரு இடத்தில் காட்டப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டு பெல்ஜிய கத்தோலிக்க ஓவியத்தில் அதே காட்சி: ஆண் தெய்வ வல்லமையாக பரிசுத்த ஆவி
"அவர் ஜலத்திலிருந்து கரையேறியதும் வானம் திறக்கப்பட்டதையும் ஆவியானவர் புறாவைப் போல தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்"
என நான்கு ஏசுகதைகளில் பழமையான மாற்கு தெரிவிக்கிறது (மாற்கு 1:10). சுவாரசியமான விசயமென்னவென்றால் இந்த ஏசுகதையில் 'கன்னி கருவுற்று ஏசுவைப் பெற்றது' குறித்து கூறப்படவில்லை.

ஆற்று நீரில் ஞானஸ்நானம் பெற்ற ஏசு மீது பரிசுத்த ஆவி புறாவடிவில் இறங்குவது குறித்து மாற்கு மட்டுமின்றி மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோர் எழுதியதாக கருதப்படும் ஏசு கதைகளும் கூட தெரிவிக்கின்றன.

"இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. " (மத்தேயு 3:16-17)
அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது,"என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:10-11)
"தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது 'தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்' தூய ஆவி இறங்கி யார் மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்" என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன் இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்." (யோவான் 1:32-34)
புறாவடிவ பரிசுத்த ஆவி நீரிலிருந்து எழும் ஏசுவை தன் நேசத்துக்குரிய மகன் என அறிவிப்பதை நோக்குக. மேரி அல்லது மரியாள் என நாம் கூறும் பெயர் எபிரேய மொழியில் மிரியம் என்பதன் கிரேக்க இணையான மரியா என்பதாகும். இந்த எபிரேய பெயருக்கு பொருள் நீர் என்பதாகும். ஆக, நீரிலிருந்து எழும் ஏசுவினை பரிசுத்த ஆவி புறாவாக வந்து வெளிப்படையாக தன் பிரிய மகனாக அறிவிக்கிறது என்றால் நீர் பெயர் தாங்கிய நங்கையின் மீது கவிந்து அதே பரிசுத்த ஆவி ஏசுவின் பௌதீக உடலை இரகசியமாக உருவாக்குகிறது. இதில் பின்னது ஏசுகாதையில் காலத்தால் பின்னிணைக்கப்பட்டது என்பது தெளிவாகுவதுடன் மேரி என்கிற பாத்திரமே குறியீட்டுத்தன்மையுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் காட்டுகிறது.

தொடக்க ஏசுகாதையில் மேரியின் பாத்திரம் இல்லாத போது அல்லது இறையியல் முக்கியத்துவம் அடையாத போது பரிசுத்த ஆவியே ஒரு தாய் தெய்வத்தன்மையுடன்தான் ஏசு தொன்மத்தில் தன் பங்கினை அளித்திருக்க வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியின் குறியீடாக புறா தேர்ந்தெடுக்கப்பட்டது கிறிஸ்தவ இறையின் தனித்தன்மை அல்ல மாறாக கற்காலம் தொடங்கி தொடர்ந்து நிலவி வந்தது மட்டுமன்றி தொடர்ந்து பரிணமித்து வந்ததோர் பெண் தெய்வ வழிபாட்டிலிருந்து கிறிஸ்தவ தொன்மம் பெற்றுக்கொண்டதாகும்.

கிமு 12000 காலகட்ட மந்திரகோல் ஓவியத்தில் புறா/பறவை தெய்வீக உரு
தெற்கு பிரான்ஸின் குகை ஓவியங்களில் (கிமு 18000-14000) பிரபஞ்ச முட்டையை தன்னுள் கொண்டுள்ள தாய் தெய்வம் சித்தரிக்கப்படுகிறாள்.பிரபஞ்சமளாவிய அன்னையை பறவையாக சித்தரிக்கும் சமயப்பண்பாடு புதியகற்கால வழிபாட்டு முறைகளில் காணப்படுகிறது.
கிமு 6000 -த்தைச் சார்ந்த பறவை தாய் தெய்வ வடிவம் கிரேக்கத்தின் செஸ்க்லோ
அவள் தன்னுள் பிரபஞ்ச முட்டையை கருவாக சுமப்பதாக ஐதீகம். வானின் நீருலகில் ஆட்சி புரிபவளாக, உயிரளிக்கும் நீரினை வழங்குபவளாக பறவை தாய் வழிபடப்படுகிறாள்.
கிரேட்டே தீவின் கிறிஸ்துவுக்கு முந்தைய மினோவன் பண்பாட்டு புறாத் தேவி தெய்வ வடிவங்கள்
கிமு 12000 காலகட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற லஸ்காவுஸ் பிரெஞ்சு குகை ஓவியங்களில் தெய்வாவேச கூத்தாடி (shaman) கைப்பிடிகளில் புறாவடிவம் காணப்படுகிறது. கிமு 6000 -த்தைச் சார்ந்த பறவை தாய் தெய்வ வடிவம் கிரேக்கத்தின் செஸ்க்லோ எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு ஐந்தாம் நூற்றாண்டின் கிரேக்க சிற்பங்களில் பெர்ஸெபோன் தேவி தன் சிம்மாசனத்தில் புறாவுடன் அமர்ந்திருக்கிறாள்.
கையில் புறாவுடன் பெர்ஸெபோன் தேவி சிம்மாசனத்தில்
கனானைட் மக்கள் சுமேரிய இனானா/இஷ்தார் தேவியை அஷ்தார்தா தேவி என வணங்கி வந்தனர். இவளது சின்னமாகவும் புறா விளங்கியது.
பண்டைய மத்தியகிழக்கின் ஆகச்சிறந்த தேவி வழிபாடாக இதுவே அமைந்திருந்தது. இவளது வழிபாடு யூதர்களிடையேயும் பிரபலமடைந்ததும் யஹீவாவின் வழிபாட்டுக்கு அது முரணாக அமைந்ததும் அதனால் யஹீவா மத ஆச்சாரியர்கள் ஆத்திரமடைந்ததும் யூதவிவிலியத்தில் கூறப்பட்டுள்ளது (உதாரணமாக: 1 ராஜாக்கள் 11:5) ஆனால் யூத மறைஞான மரபுகளில் ஷெஹினா, சோஃபியா ஆகிய அம்சங்களில் இவள் வழிபடப்பட்டாள்.
உச்சியில் காட்டப்படும் புறா கிறிஸ்தவ ஓவியத்தின் வேர்கள் சுமேரிய எகிப்திய சிற்ப-ஓவியங்களில் காணலாம்: 1. சுமேரிய தேவி கோவில் முகப்பு 2.நெபர்திடி எனும் எகிப்திய அரசியின் கல்லறைக்கு செல்லும் வாசல் முகப்பு ஓவியம்
இதுவே பின்னர் கத்தோலிக்க மதத்திலும் நீடித்தது.
பொது பிரக்ஞையில் மைக்கலேஞ்சலோவின் ஆதாமின் சிருஷ்டி குறித்த ஓவியம்
சிஸ்டைன் சேப்பலில் உள்ள மைக்கலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் யஹூவா தேவனின் ஒருவிரல் ஆதாமை தொட்டிருக்க மறு கை ஒரு விண்ணக பெண்ணை அணைத்திருக்கும். இன்னமும் படைக்கப்படாத ஏவாள் என்றும் இறைஞான தேவியான சோஃபியா எனவும் இது கலை விமர்சகர்களால் வியாக்கியானிக்கப்படுகிறது.
யஹீவாவின் இறைசக்தியாக மட்டுமன்றி சோஃபியா யஹீவாவின் தாயாகவும் ஞான கிறிஸ்தவ மரபில் (கத்தோலிக்க சபையால் அழிக்கப்பட்ட க்னாஸ்டிக் மரபில்)கருதப்படுகிறாள்
இது சோஃபியா எனில் கிறிஸ்தவத்தில் பழமையான தேவி வழிபாட்டுத் தாக்கமும் தொடர்ச்சியும் கத்தோலிக்க சபையினையும் மீறி இருந்ததையேக் காட்டுகிறது.

பரிசுத்த ஆவியின் கனிகளாக/பரிசுகளாக கருதப்படும் ஏழு குணங்களில் தலையானது ஞானமாகும் (ஸோஃபியா). பண்டைய கிறிஸ்தவ மரபில் இவை ஏழும் புறாக்களாகவே சித்தரிக்கப்படுவதைக் காணலாம். கத்தோலிக்க ஞானோபதேசத்தில் ஏழு புறாக்களின் இந்த சித்தரிப்பும் கூட கிரேக்க புராண வேர்கள் கொண்டதுதான். வேட்டைக்கார ஓரையன் ஏழு சகோதரிகளைக் கண்டு ஆசை கொண்டு அவர்களை ஏழு ஆண்டுகளாக பின் தொடர்ந்தான். ஸீயஸ் தெய்வம் அந்த ஏழு சகோதரிகளையும் ஏழு புறாக்களாக்கி விண்மீன்கள் நடுவே வைத்தார் என்றும் இவையே கார்த்திகை நட்சத்திர தொகுதி என்பது கிரேக்க புராணம். கார்த்திகை நட்சத்திர தொகுதி கிரேக்க மொழியில் Pleiades எனப்படும். இதன் பொருள் 'புறாக்கூட்டம்' (peleiades) என்பதாகும்.

மத்தியகால கிறிஸ்தவ ஓவியத்தில் பரிசுத்த ஆவியின் ஏழுபரிசுகள் ஏழு புறாக்களாக : இது கிரேக்க தொன்மத்திலிருந்து பெறப்பட்டது
ஆக, கிறிஸ்தவ கதையாடலில் ஆண் தன்மையுடன் மாற்றப்பட்ட பரிசுத்த ஆவி மற்றும் அதன் குறியீடான பறவை -குறிப்பாக புறா வடிவ- ஆகியவற்றின் வேர்கள் பண்டைய கிறிஸ்தவமல்லாத தொன்மங்களில் இருப்பதுடன் மேரி எனும் பெயரே தொன்மக் குறியீட்டுத் தன்மை கொண்டதோர் பாத்திரப் படைப்புக்கான ஆதாரமாக விளங்குகிறது. இனி ஏசு சைத்தானை எதிர்கொள்ளும் விஷயங்களையும் அதிகாரபூர்வ கிறிஸ்தவத்தின் ஏசு கதையாடலில் சைத்தான் எனும் பாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும் காணலாம்.

Labels: , , , ,